இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.
இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

இசைஞானி பற்றி விகடன் நினைவுநாடாக்களில் வாலி மனம்திறந்தவை!!!

நினைவு நாடாக்கள் ஒரு rewind
வாலி
ஓவியம் : மணி, படம் : கே.ராஜசேகரன்
தலைப்புச் செய்தி!

'ஸ்வாமிநாத - பரிபாலயமாம்!’- சவுக்க காலத்தில் பாடப்பெறும் சாஹித்யம் இது; மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றியது.நாட்டை ராகம்; நல்ல பாட்டு. கேட்கும்போதே, நம் அகக் கண் முன் ஆறிரு கரத்தனாய் ஸ்வாமிமலை ஸ்வாமிநாதன் பிரத்தியட்சமாய் நிற்பான், பிரசன்ன வதனத்தோடு!

இந்தப் பாட்டைப் பாடித்தான் - இசைஞானி இளையராஜா அவர்கள், என்கூட வரும் ஸ்வாமிநாதனைக் குசலம் விசாரிப்பார்!ஸ்வாமிநாதன் இல்லாமல் ஸ்டூடியோவிற்கு நான் சென்றது கிடையாது. முப்பத்தைந்து ஆண்டுகளாக, என்னுடைய இயக்கம் அவனைச் சார்ந்துதான்; நீண்ட இரவிலும் என்னை நீங்கா நிழலவன்!
உறவு முறையில் மைத்துனன்; உத்தியோக முறையில் என் முதல் நிலை உதவியாளன்.

ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்துவைத்து, ஒரு வருடம் கழித்து வாங்கிக்கொள்ளலாம்; அதே நோட்டுகள் அப்படியே இருக்கும். அவ்வளவு கை சுத்தம் DETTOL  போட்டுக் கழுவினாற்போல்!என் குணத்திற்கு எவனும் என்னோடு எட்டு நாள் சேர்ந்தாற்போல் இருப்பதரிது; 'போய்யா; நீயுமாச்சு, உன் சோறுமாச்சு!’ - என்று நான் வளர்த்த நாய்கூட, வெறுத்துப்போய் வீட்டைவிட்டே ஓடிப்போன கதை எல்லாம் உண்டு.'வாழ்க்கைப்பட்டுத் தொலைச்சுட்டேன்; வேற போக்கிடம் ஏது? எனக்குத்தான் இப்படி! என் தம்பிக்கென்ன தலையெழுத்தா - உங்க வசவை வாங்கிண்டு இங்க இருக்கணும்னு?’ - என்று என் மனைவியே, தலையிலே அடித்துக்கொண்டு, ஸ்வாமிநாதனுக்காகத் தாபந்திரியப்பட்டதுண்டு!என்னுடைய கல்யாண குணங்களை எண்ணுமிடத்து, எனக்கே என் மேல் கோபம் வரும்; என் செய்ய? என் வார்ப்படம் அப்படி!'இன்னது செய்யலாம்; இன்னது செய்யக் கூடாது’ - என்றெல்லாம் ஸ்வாமிநாதன், ஒரு BIG BROTHER ஸ்தானத்திலிருந்து எடுத்துக் கூறுவான்.அவன் சொல்லைப் புறம் தள்ளுவேன்; அடுத்த அரை மணி நேரம் கழித்து; அவன் சொன்னதுதான் அறம் எனக்கொள்ளுவேன்.

ஆனால் - அந்த அரை மணி நேரத்திற்குள் அவனுக்கு நான் நடத்தும், அஷ்டோத்தர அர்ச்சனை இருக்கிறதே -அதை, மானமுள்ள எவனும் கேட்டுக் கொண்டு ஒரு நொடி என் வயின் நிற்க மாட்டான்; ஸ்வாமிநாதன் நிற்பான்! ஏன் தெரியுமா? அவனுக்குத் தன்மானம்விட, என் மானம் பெரிது!ஒரு சீனக் கதை நினைவிற்கு வருகிறது.அடிக்கடி கோபம்கொண்டு - தன் மகனை ஒரு தந்தை அடிப்பதுண்டு. தந்தை பால் உள்ள அளப்பரும் அன்பால், வலியைப் பொறுத்துக்கொண்டு மகன் வாளா விருப்பான்.ஒருநாள், தந்தை வெகுண்டு மகனின் தாடையில் அறைகையில் -மகன் 'ஓ’ வென்று அழுதான்; தந்தை வியப்பு மேலிட்டு -'மகனே! நான் எவ்வளவு அடித்தாலும் அழாதவன் நீ; இன்று அழுகிறாயே? மிகவும் வலித்துவிட்டதா?’ என்று வினவினான்.அதற்கு மகன், தந்தையின் கரங்களை அன்போடு பற்றிக்கொண்டு -'அப்பா! முன்புபோல் வலிக்கவில்லையே என்றுதான் நான் அழுதேன்; உங்கள் பலம் குறைந்து, நீங்கள் பலவீனமாகிவிட்டீர்களே அப்பா!’ என்று விக்கி விக்கித் தொடர்ந்து அழலானான்.
அந்த மகன்போல், ஸ்வாமிநாதன்; நான் சினந்து சீறுகையில், எங்கே எனக்கு BLOOD PRESSURE ஏறிவிடுமோ என்று வலியை, வசவுகளைப் பொறுத்து நிற்பான்!'அகலகில்லேன் இறையளவும்’ என்று திருவேங்கடத்தானைத் தழுவி நிற்கும் அலர் மேல் மங்கைத் தாயார் போன்றவன் அவன்!முதல்வரோடு மேடையில் அமர்ந்துஇருப்பேன்; என் பின் ஸ்வாமிநாதன் நிற்பான். காவல் துறை அதிகாரிகள் அறிவார்கள் -கலைஞருக்கு ஷண்முகநாதன்போல்; இந்த கவிஞருக்கு ஸ்வாமிநாதன் என்று!ஸ்டூடியோவில் ஸ்வாமிநாதனைக் கண்டால், 'வாலி சார் வந்திருக்கிறாரா?’ என்று வினவுவர் - கமல், ரஜினி முதலானோர்.

அருளாளர் திரு.ஆரெம்வீ சொல்லுவார்; 'ஸ்வாமிநாதன் மாதிரி ஒரு ஆள் வாய்க்கிறது ரொம்ப அபூர்வம்!’ என்று.எவரோடும் எளிதாகப் பேசும் இயல்பு உடையவரல்ல திரு.இளையராஜா. எவ்வளவு பெரிய தனவந்தர் வீட்டுத் திருமணமாயினும், அவரது வருகையை ஆராலும் உறுதி செய்ய முடியாது.அப்படிப்பட்டவர் -பழைய மாம்பலத்தில் நடந்த ஸ்வாமிநாதன் திருமணத்திற்கு, எனக்கு முன்னதாகச் சென்று பரிசுப் பொருள் வழங்கி ஆசீர்வதித்தார் எனில் -ஸ்வாமிநாதனின் சற்குணங்களே, அதற்குக் காரணம்; அவனுக்கு வாய்த்த மனைவி திருமதி சீதாவும் ஓர் அருங்குணவதியே!ஸ்வாமிநாதனுக்கு ஒரு கண் இல்லை; ஸ்வாமிநாதன் இல்லையெனில், எனக்கும் ஒரு கண் இல்லையென்றாகும்!
'ஸ்வாமிநாத பரிபாலயமாம்’ பாடி - ஸ்வாமிநாதனைக் குசலம் விசாரிக்கும் -
இசைஞானி இளையராஜாவைப்பற்றி இந்த இடத்தில் என் சிந்தனை சிறகடித்து அவரோடு பழக நேர்ந்த ஆரம்ப நாள் களை நோக்கிச் செல்கிறது.'பிரியா விடை’ என்றொரு படம். முத்துராமன்-பிரமீளா நடித்தது. பிரசாத் ஸ்டூடியோ தயாரித்தது.
அமரர் திரு.G.K.வெங்கடேஷ் அவர் கள்தான் இசை. அங்கு பாட்டெழுதப் போகையில்தான் இளையராஜாவை ஒரு GUITAR PLAYER ஆக COMPOSING - ல் சந்திக்கிறேன்.பாட்டுக்கான பல்லவியே -
'ராஜா! பாருங்க! ராஜாவைப் பாருங்க!’ என்று எழுதுகிறேன்.பின்னாளில், தன் இசையால் திசைகளை அளக்கப்போகும் ஒரு நபரை, முன் கூட்டியே முகமன் கூறி நான் வரவேற்பதுபோல் வாய்த்திருந்தது அந்தப் பல்லவி.அதுதான் நிமித்தம் என்பது!பின் இளையராஜா வளர்ச்சியும் வாழ்வும் வையம் அறிந்ததே. நான் இப்போது எழுதப் புகுவது யாதெனில் -இளையராஜாவின் வரலாறு இவ்வுலகிற்கு விடுக்கின்ற செய்தி என்ன என்பதுதான்!ஓர் உயிர் - விண்ணினின்றும் ஒரு பெண்ணில் இறங்குகின்றது; பின், பெண் ணினின்றும் மண்ணில் இறங்குகின்றது. இறுதியில், மண்ணினின்றும் அது விண்ணில் ஏறுகின்றது.இந்தச் சுழற்சியில் -'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ - எனும் பெரு வழக்குதான், பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் கலவாத பரிசுத்தமான உண்மை.'வர்ணாஸ்ரம தர்ம’மும்; 'மனுதர்ம’மும் - வந்தவன் போனவன் வகுத்தவையேஅல்லாது, வல்லான் வகுத்தவையல்ல.இன்னணம் இருக்கையில் -எவர் எழுச்சியை எவர் தடுக்க ஏலும்? காற்றுடைய கைப் பந்தை, ஆழ நீரில் நெடு நேரம் அமுக்கிவைக்க ஆரால் ஆகும்?முட்களுக்கிடையே முகை விரிக்கும் ரோஜா மலர்போல் -முடை நாற்றமெடுத்த மூடத்தனங்களைத் தகர்த்துத் தலையெடுத்துத் தகத்தகாயமாய்த் துலங்க -ஓர் உயிர் முனையுமாயின், அதன் வெற்றியை அது வடிக்கும் வியர்வைதான் தீர்மானிக்கிறது! 

ளையராஜாவை, முப்பத்தைந்தாண்டுகளாக, அருகிருந்து அணு அணுவாகப் பார்த்தவன் நான்.நான் - சினிமாவில் புகுங்காலை, எப்படி பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும் களத்தில் இருந்தார்களோ -அப்படி இளையராஜா இசையமைக்கப் புகுங்காலை - விஸ்வநாதன் அவர்களும்; கே.வி.மகாதேவன் அவர்களும் - கோடம்பாக்கத்தில் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள்.ஓர் 'அன்னக்கிளி’யால் மட்டும்,ஆகாயத்தை அளாவி நிற்க முடியுமா என்ன?இளையராஜா - இரவும் பகலும் தன்னைத்தானே வருத்திக்கொண்டு இசை யின் சகல பரிமாணங்களையும் உள்வாங்கி நிற்கலானார்!அதிகாலை சேவற் கோழி கூவுமுன் விழித்தார்; சாமக்கோழி கூவியபின் துயின்றார்.இடைப்பட்ட நேரங்களில் -சம்ஸ்க்ருதம் கற்றார்; சாஸ்த்ரீய சங்கீதத் தைக் கற்றார்; 'பீத்தோவ’னையும் 'மொஸாட்’ டையும் தன் பியானோவின் மடியில் மீட்டும் பிறப்பெடுக்கச் செய்து -காலவெள்ளத்தால் -சற்றே துருப்பிடித்திருந்த அவர்களது தூய இசைக்குத் துலாம்பரமாகச் சாணை பிடித்துக் கூர் ஏற்றினார். 

தேம்ஸ் நதி தீரத்திலே -வெள்ளை உரோமங்கள் வியப்பில் புளகம் எய்த -பண்ணைப்புரத்தை பக்கிங் ஹேம் கை குலுக்கி கவுரவிக்க -SYMPHONY செய்தார்! 

ழுபத்திரண்டு மேளகர்த்தாக்களையும்; ஜன்யங்களையும் - கற்று, பலவற்றைப்    படப் பாடல்களில் -அவற்றின் ஆரோகண அவரோகண ஸ்வரங்கள் - அதனதன் ஸ்தானங்களில் சௌக்யமாய் எழுந்தருளியிருக்க -இடம் பெறவைத்து இசைபெற இசைத்து -சங்கீதப் பிதாமகர் செம்மங்குடியின் விரல்களை அவர் மூக்கின் மேல் அமர்த்திய - இளையராஜாவை முழுமையாய்ப் பாராட்ட, தமிழுக்கு நானெங்கு போவேன்?'வருஷம் 16’-ல், CLIMAX SONG; 'தோடி’ ராகத்தில் அதைத் தோய்த்தெடுத்த ராஜாவின் வித்தகம் - ராப்பகலாக உழைத்தாலும் பிறிதொருவருக்கு வசப்படுமா 'ரீதிகௌளை’; 'பிலஹரி’; 'தர்பாரி கானடா’; 'மலய மாருதம்’; 'நளினகாந்தி’; 'நாட்டக்குறிஞ்சி’ - சொல்லிக்கொண்டே போகலாம்! 'தமிழ்’ - என்று எடுத்துக்கொண்டால், எனக்கே வெண்பா இலக்கணம் கற்பித்தவர் இளையராஜாதான்! 

திருவரங்கம் கோபுரம் கட்டும் திருப்பணிக்கும்; தாய் மூகாம்பிகைக்கு வைர அபய ஹஸ்தம் அணிவிப்பதற்கும்; திருவண்ணாமலைக் கோயில் கோபுரப் பராமரிப்புக்கும்...பல லட்சங்களை மனமுவந்து தந்த வண்மைக் குணம், இசைஞானியல்லாது எவர்க்கு வரும்?அவர் -கண்மூடித்தனமாய்க் கை கூப்பிக் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் ஆன்மிகவாதியல்ல.தன்னுள் தன்னைத் தேடி அந்தத் 'தன்’னிலேயே தன்னைக் கரைத்துக்கொண்ட சித்தர் அவர்!

ஒரு நூற்றாண்டு காலம் அருள்பிலிற்றி நின்ற காஞ்சிப் பெரியவாளால், பெரிதும் போற்றப்பட்டவர் இளையராஜா.ரமணாஸ்ரமத்தின் உள்ளேயே இளையராஜா தங்கித் தியானிக்க ஒரு குடில் இருக்கிறது.தீவிர சைவம்; அவரது வீட்டில், மாதத்தில் பல நாள்கள், வேதபாராயணம் நடக்கும். நவராத்திரி ஒன்பது நாள்களும், செந்தழல் வளர்த்தோம்பும் ஓமம் உள்பட -ஓர் அம்மன் சந்நிதிபோல் சங்கீத வித்வான்களின் 'சதஸ்’ நடக்கும்!இசைஞானி இளையராஜாவிற்கு இணையாக இன்னோர் அந்தணர் இலர் என்பேன்!

மூகத்தையும், சாதி அமைப்பையும் சாடி நிற்காமல் -அதை அறவே புறக்கணித்து, மெய் வருந்த முயற்சித்தால், எவரும் மேன்மையுறலாம் என்பதுதான் -இளையராஜாவின் வரலாறு இவ்வுலகுக்கு வழங்குகின்ற - தலையாய செய்தி! தலைப்புச் செய்தி!
- சுழலும்...

வியாழன், 2 ஜூன், 2011

இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

 "எனக்குத்தான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்"
இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!. ராஜா சார்.... மென் மேலும் உங்கள் இசைப்பணியும், இறைப்பணியும் சிறக்க , உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க எல்லாம் வல்ல இறையருளை இந்நாளில் வேண்டுகிறேன். உங்களை ரசிகர்களாகிய நாங்கள்  இப்படி ஆத்மார்த்தமாக கொண்டாடுவது  நீங்கள் செய்துகொண்டிருக்கும் இசை சாதனைக்காக அல்ல, நீங்கள் என்றோ செய்துவிட்ட இமாலய இசை சாதனைகளுக்காகத்தான் என்பதை மீண்டும் அழுத்தமாக இங்கே பதிவு செய்கிறேன், அது யாராலும் நெருங்கமுடியாத ஒரு சாதனை !!!.

யாம் பெற்ற இன்பம்

யாம் பெற்ற இன்பம்

ரமண மாலை,குரு ரமண கீதம் ,திருவாசகம் கேட்போம். நல்ல மனிதம் வளர்ப்போம். தெய்வ சிந்தனை பெறுவோம் தீய எண்ணம்,பழக்கம் விடுவோம்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

இசைஞானியுடன் ஒரு இசைப்பயணம் !!!யாரும் தவற விடக்கூடாத ஒன்று!!!

ருமை நண்பர்களே!!!
இசைஞானியுடன் ஒரு இசைப்பயணம் என்னும் அபூர்வமான ஒரு நேர்காணலை இசையருவி சேனலில் இயக்குனர் மிஷ்கின் ஏற்பாடு செதிருந்தார்.மனதுக்குள்  ஆனந்தப் பேரலைகளை ,மிகவும் தோற்றுவித்த ஒரு நிகழ்ச்சி அது என்பேன். நான் நந்தலாலா படத்தை சென்னைக்கு விரைவில் வந்து பார்க்க இருக்கிறேன்.நிச்சயம் அதன் பாதிப்பை நடுக்கத்துடனாவது பதிவு செய்வேன்.  இந்த நிகழ்ச்சி பார்க்கையிலேயே, படத்தை எப்படியும் பார்த்துவிடவேண்டும்,  என்ற ஆவல் ஒருவருக்கு எழுவது திண்ணம்.

தே நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில், இசைஞானி உருவாக்கித் தந்த ஐந்து பாடல்களில் மூன்றினை  படத்தில் உபயோகப்படுத்தாததற்கு இளையராஜாவிடமும், அவர் ரசிகர்களிடமும் மனப்பூர்வமாக மன்னிப்புக்கேட்டார் மிஷ்கின்,   அந்த பாங்கு மிகவும் அரிய ஒன்று.    இவ்வளவு தன்னடக்கத்துடன் மிஷ்கின் பேசி நான் பார்த்ததே இல்லை,எப்போதுமே அறைக்குள்ளேயே குளிர் கண்ணாடி அணிந்து கொள்ளும் மிஷ்கின்,நேர்காணல் ஆரம்பித்த மூன்றாவது நிமிடம், அதை கழற்றியேவிட்டார், அதன் பின்னர் அணியவேயில்லை. 

யக்குனர் மிஷ்கின் இசைஞானியை பாராட்டு மழையில் நனையவிட்டார் என்றால் மிகையில்லை.  யாரும் தவறவிடக்கூடாத நேர்காணல் இது, இது போல இசைஞானி நேர்காணல் கொடுப்பது மிக மிக அபூர்வம்.இதை தயாரித்த இசையருவிக்கும்,யூட்யூபில் வெளியிட்ட டெக்சதீஷ். நெட்டிற்கும் மிக்க நன்றிகள்.
நந்தலாலா படத்தின் மகத்தான 25 பிண்ணணி இசைக்கோர்வைகளை நண்பர் சுரேஷ் குமார் அவரது தளத்தில் தொகுத்திருக்கிறார். தரவிறக்க சுட்டிக்கு
======00000======
பாகம்-1


பாகம்-2

பாகம்-3

======00000======

புதன், 3 நவம்பர், 2010

இசைஞானியின் மீது சாரு வைத்திருக்கும் மரியாதை !!!

அருமை நண்பர்களே!!!,

நான் இன்றைய தேதிவரை எந்த ஒரு இசையமைப்பாளரின் இசையையும் விட இசைஞானியை தன்னிச்சையாக விரும்பிக் கேட்டும் வருகிறேன். சாரு தன் தளத்தில் இசைஞானி பற்றி அவதூறாக கோபமாக பேசியவற்றை நாளடைவில் ஒரு தாய்க்கும் மகனுக்கும் உண்டான சச்சரவாகவே பார்க்க பழகிக்கொண்டேன்,எப்படி ஒருவன் தன் கை தவறு இழைத்ததென்று கையை வெட்டிப்போடமுடியாதோ,அப்படித்தான் இசைஞானியின் எதோ சோபிக்காத சில இசைகோர்வைகளை, பாடல்களைக்கேட்டுவிட்டு அவரை தூற்றுவதும்.சேறு வாரி இறைப்பதும், முன்பே சாரு விரும்பிக்கேட்பது இசைஞானியின் இசையே என்பதை கணித்தும் இருந்தேன்.அதற்கு முத்தாய்ப்பாக அமைந்தது சாருவின் தளத்தில் வெளியான இக்கடிதம்.நன்றி சாரு

 

ஒரு அற்புதமான கடிதம்...

 October 31st, 2010
அன்புள்ள சாரு,
வணக்கம்.
நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இது. ஒரு நல்ல வாசகன், ஒரு எழுத்தாளரை மனதாகக் கொண்டாடுபவன் ஒருபோதும் அவருக்குக் கடிதமெழுத மாட்டான் என்பது என் நிலைப்பாடு. பல வருடங்கள் தொடர்ந்து உங்களைப் படித்து வரும் நான் முதன்முறை உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன். புத்தகக் கண்காட்சியில் தூர இருந்து உங்கள் சிரிப்பையும், குழந்தை போன்ற வெகுளித்தனம் ததும்பும் உடல்மொழியையும் எட்ட நின்று ரசித்தவன். உங்கள் எழுத்தை மனதாரக் கொண்டாடி என் வாழ்வோடு பிணைத்துக் கொண்டவன். இதை எழுத்தில் வடிக்கும்போதே அதில் ஓர் ஆபாசம் வந்து உட்கார்ந்து விடுகிறது சாரு. என் இதயத்தில் உங்களிருக்கும் அந்த இடத்தைத் தொட்டுத் தீண்ட உங்களுக்கே கூட உரிமை இல்லை சாரு. அப்படித்தான் நான் நினைக்கிறேன். இந்த உலகில் திடீரென்று ஸீரோ டிகிரியின் அனைத்து பிரதிகளும் தொலைந்து போனாலும், எரிந்து போனாலும் பிரச்சினையில்லை சாரு. என் மனதில் இருந்தே வரிவரியாக, எழுத்தெழுத்தாக என்னால் ஸீரோ டிகிரியைத் திரும்ப எழுதிவிட முடியும். நிறுத்தற்குறிகள், காற்புள்ளிகள் உட்பட.
இத்தனை தீவிரமாக இருக்கும் என்னை உங்களுக்குக் கடிதம் எழுதத் தூண்டியது எது? என் மனதில் உங்களிடத்திற்கு ஒரு படி, ஒரே ஒரு படி மேலேயிருக்கும் என் இன்னொரு குருவைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் தவறான அபிப்ராயத்தால்தான்.
இந்த இடத்தில் என் பின்புலத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது.
நான் தமிழகத்தின் கடற்பகுதியைச் சேர்ந்தவன். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவன். அப்பாவுக்குத் தொடர்ந்து மாற்றலாகிக் கொண்டிருக்கும் வேலை. என் அப்பா பெரிய படிப்பாளி. வாழ்க்கையில் பணத்தைக் காட்டிலும், பகட்டைக் காட்டிலும் – வேறு பல விஷயங்கள் முக்கியமானவை என்பதை நன்கு அறிந்தவர். அவர் வடகிழக்குப் பகுதிக்கு மாற்றலாகிப் போனபோது எங்கள் குடும்பத்தையும் உடன் அழைத்துச் சென்றார். எதற்காக? எங்களுக்கு வடகிழக்குப் பகுதியின் பல அழகான விஷயங்களும், கலாசாரமும் அறிமுகமாகவேண்டும் என்பதற்காக. அப்போது கல்கத்தாவில் வசித்தோம். விடாமல் வார இறுதிகளில் தமிழ் வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வார். நானும் தங்கையும் வகுப்பறையில் இருக்கும்போது, அப்போது வெளியே மைதான மரத்தடியில் ஜேம்ஸ் ஜாய்ஸ், ப்ரேம்சந்த் இவர்களைப் படித்துக் கொண்டிருப்பது இன்னும் என் மனதில் நிழலாடுகிறது.  கல்கத்தாவில் 7 வயதிலிருந்து 15 வயது வரை மேற்கத்திய செவ்வியல் இசை கற்றுக் கொண்டேன்.
என் மனம் முழுதும் இசை என்னை ஆக்கிரமித்துக் கொண்டது அப்போதுதான். ஆனால் அப்போதே அப்பா தெளிவாக இசையிலிருந்து இளைப்பாற நல்ல இலக்கியம் அவசியம் என என்னை நல்ல நல்ல தமிழ், இந்தி, ஆங்கில இலக்கியங்களுக்கு அறிமுகப்படுத்தினார். சுஜாதா இந்தியா கண்ட தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதை என்னால் சத்தியம் செய்து சொல்ல முடியும். உங்களை உலக இலக்கியகர்த்தாக்களில் ஒருவராகவே நான் பார்க்கிறேன். இந்திய எல்லைக்குள் உங்களை சுருக்குவது நான் இலக்கியத்துக்கு செய்யும் துரோகம்.
கல்கத்தாவில் பியானோவும், கிதாரும் வாசிக்கக் கற்றுக் கொண்டேன். என் தீவிரத்தைப் பார்த்த அப்பா, மிகவும் தெளிவாகவே நான் லெளகீகக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டியதில்லை எனத் தெளிவாகவே சொல்லிவிட்டார். அதனால் நான் மூழ்கிக் கிடந்தது இசை, இசை, இசையில் மட்டுமே. இளைப்பாற மேலே வரும்போது நான் சங்க இலக்கியத்திலும், தங்களிடமும், சுஜாதாவிடமும், தஸ்தோவெஸ்கி, தால்ஸ்தாயிடமும், தாகூரிடமும் இலக்கியம் மூலம் உடையாடியபடி இருப்பேன். கடலிலிருந்து மாலை நேரத்தில் வெளிவந்து மணலில் அமர்ந்திருக்கையில், என் அந்திவானத்தின் பொன்மஞ்சள் நிற சூரியக்கதிர்கள் நீங்களும், இவர்களும்.
மேற்கத்திய இசையில் நல்ல தேர்ச்சி பெற்ற எனக்கு ஒரு இசையமைப்பாளராவதுதான் லட்சியமாக இருந்தது. அப்போதுதான் என் வாழ்வில் இன்னொரு திருப்பம் நிகழ்ந்தது. அப்பா ஒரு தீவிரமான நாத்திகர். அம்மா ஒரு தீவிரமான கத்தோலிகர். அதனால் எனக்கு எப்போதும் சர்ச் சார்ந்த இசை அறிமுகமே இருந்தது. ஒருநாள் என் நண்பன் ஒருவன் வற்புறுத்தி கல்கத்தா வந்திருந்த உஸ்தாத் பிஸ்மில்லா கானின் கச்சேரிக்கு அழைத்துச் சென்றான். அதுவரை மேற்கத்திய இசையை மட்டுமே பெரிதாக நினைத்த என் மனத்தின் அகங்காரம் முற்றாகக் கழன்று விழுந்தது. ஏதோ ஒரு அழகை, என்னவோ என்னைப் பிடித்து உலுக்கிவிட்டது. அந்த நாளை இன்னும் கூட என்னால் தெளிவாக எழுத்தில் வடிக்க முடியவில்லை.
அப்போது என் தந்தைக்கு மகாராஷ்டிராவுக்கு மாற்றலானது. புனேயின் கலாசாரச்சூழல் பிடிக்காமல் என் அப்பா, எங்கள் குடும்பத்தை கோலாப்பூரில் குடியமர்த்தினார். வார இறுதிகளில் வந்துவிடுவார். உள்ளுக்குள் ஹிந்துஸ்தானி நெருப்பு எனக்குத் தீராமல் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. என் பக்கத்துவீட்டுக்காரர்களின் பரிந்துரையின் பேரில் என் குருவை சந்தித்தேன். அவரிடம் என்னை அறிமுகப்படுத்தியவர்கள் என்னை எச்சரித்தே அனுப்பியிருந்தார்கள். அவர் சரியான முசுடு. யாரையும் மதிக்க மாட்டார் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். அவருக்குள் மூச்சுக்காற்று போல இசை ஓடிக்கொண்டேயிருந்தது. கூடவே ராமஜபமும். என்னை ஏற இறங்கப்பார்த்த அவர், எதற்காக நான் இசை கற்றுக்கொள்ள நினைக்கிறேன் என்று கேட்டார். உஸ்தாத் பிஸ்மில்லா கானின் இசை என்னை உலுக்கி அழவைத்தது. அந்த மனநெகிழ்வு எப்போதும் என்னுடனே இருக்கவேண்டுமென்பதற்காக இசை கற்றுக்கொள்ள நினைக்கிறேன் என்றேன். என்னையே பார்த்துக்கொண்டிருந்த அவர் முகம் உடனே கலங்கி எந்தக் கட்டுப்பாடுமின்றி கண்ணீர் வரத்தொடங்கியது. ‘எப்பேர்ப்பட்ட கலைஞர் இல்லையா? அவர் பெயரைச் சொன்னதற்காகவே உனக்கு சங்கீதம் கற்றுத்தர முடிவு செய்துவிட்டேன். தினம் ஒரு ரூபாய் காணிக்கை அந்த உண்டியலில் போட்டுவிடு. அது என் ராமருக்கு’ என்று என் சிட்சை தொடங்கியது.
ஊரெல்லாம் முசுடு என்று ஒதுங்கிப்போகும் அவர், உள்ளுக்குள் ஒரு குழந்தை என சில நாட்களிலேயே தெரிந்தது. எந்நேரமும் நாத லயிப்புதான் அவருக்கு. மோகமுள்ளில் பாபுவின் குரு ரங்கண்ணாவைப் போல. இந்தியாவின் கிட்டத்தட்ட அத்தனை இசைமேதைகளையும் கேட்டுவிட்ட என்னால் அவர் ஒரு மாமாபெரும் இசைமேதை என நிச்சயம் சொல்ல முடியும். திடீர் திடீரென்று மனம் நெகிழ்ந்து ஏதாவது இசைமேதையைப் பற்றிப் பேசத்தொடங்கிவிடுவார். ரோஷன் இசையமைத்த ‘ஏ இஷ்க்கு இஷ்க்கு ஹைன் இஷ்க்கு இஷ்க்கு’ கவ்வாலியைக் குறித்து அவரால் கண்ணீர் சிந்தாமல் பேசவே முடியாது. எல்லா இடத்திலும் அவருக்கு ஏதோ இசை கேட்டுவிடும்.
ஒருநாள் மிகவும் நெகிழ்ந்த மனநிலையிலிருந்த அவர், என்னைப் பார்த்ததும் ஓடிவந்து ஆரத்தழுவிக்கொண்டார். ‘எப்பேர்ப்பட்ட கலைஞன்! நீயும் தமிழந்தானே… நீதான் எத்தனை கொடுத்துவைத்தவன்!’ என்று புலம்பத் தொடங்கிவிட்டார். அவர் பல கர்நாடக இசைமேதைகளை – ஜி.என்.பி, ராம்நாட் க்ருஷ்ணன், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்றவர்களைக் கொண்டாடுபவர் எனத் தெரியும். அதுபோக அந்தக்கால தியாராஜ பாகவதர், சின்னப்பா தொடங்கி கே.வி.மகாதேவன், சி.ராமச்சந்திரா, சுப்பாராவ், ஜி.ராமநாதன் என அத்தனை பேரின் முக்கியமான படைப்புகளையும் கேட்டவர். வருடத்தின் பாதியை அவர் பயணத்தில், கோயில்களை தரிசிப்பதில் செலவழிப்பவர். இந்தியாவின் அத்தனை பகுதிகளையும் அவர் நடந்தே சுற்றியிருக்கிறார். ஒவ்வொரு பகுதியின் முக்கியமான பல இசைக்கலைஞர்களையும் அதனால் அவர் தெரிந்து வைத்திருந்தார். அப்படித்தான் தமிழக இசைமேதைகளும் அவருக்கு அறிமுகம். அதனால் அன்றைய உருப்படி யாராயிருக்கும் என்று எனக்குள் குழப்பம்.
‘என்ன கலைஞனடா இவன்! இவனுடைய பிற பாடல்கள் கிடைக்குமா? உனக்கு நிச்சயம் தெரிந்திருக்குமே?’ என்றார். அவர் அப்படி உருகிக்கேட்ட இசைக்கலைஞனின் பெயர் ‘இளையராஜா’.
எனக்குத் தீயை மித்தது போலிருந்தது. நான் சினிமாக்காரர்களையே ஒத்துக்கொள்கிறவன் இல்லை. பீதொவன், மொட்ஸார்ட், பாஹ், உஸ்தாத் பிஸ்மில்லாகான், உஸ்.ஆமிர்கான், உஸ்.அல்லாடியாகான், கொஞ்ச கொஞ்சம் கர்நாடக சங்கீத மேதைகள் போன்றோரின் இசையைக் கேட்டுவளர்ந்தவன் நான். அதனாலேயே கொஞ்சம் திமிரோடு இருப்பவன். ஆனால் என் குரு சொல்லும் திரையிசைக்கலைஞர்களான எஸ்.டி.பர்மன், நெளஷாத், பழைய இசைமேதைகளை ஒத்துக்கொள்பவன். இப்போது திடீரென்று இளையராஜாவைப் பற்றிப் பேசுகிறாரே? அடுத்து தேவாவா? (அப்போது ரஹ்மான் வந்திருக்கவில்லை) என அதிர்ந்தேன்.
அவர் எனக்குப் போட்டுக்காட்டிய பாட்டு – ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ என்ற ‘நாயகன்’ திரைப்படப்பாடல்.
அதை முதல்முறை கேட்டவுடனேயே நான் அது ஒரு இசைச்சாதனை எனக் கண்டுகொண்டேன். அப்பாடல் இன்றும் பெரும்பாலானோரால் தேஷ் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது ஷ்யாம்-கல்யாண் என்ற அரிதான ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைந்த பாடல். என் குரு மீண்டும் மீண்டும் சொன்னார்: “வாய்மொழி சொன்னால் தெய்வீகம்” என்ற இடம் முடியும் இடத்திலிருக்கும் ஷ்யாம்-கல்யாணின் பிடியைக் குறித்து அவர் அப்படி சிலாகித்தார். போலவே “இசைமழை எங்கும் பொழிகிறது” என்ற வரி. “என்ன ஒரு ராகம். அதற்கு இவன் தீட்டியிருக்கும் வர்ணம்தான் என்ன!” என்றொரு அங்கலாய்ப்பு அவருக்குள். எனக்கும்தான். நான் ஷ்யாம்-கல்யாண் தவிர இன்னொன்றையும் கண்டுகொண்டேன். எனக்குள் இருந்த மேற்கத்திய இசைக்கலைஞன் விழித்துக்கொண்டான். அப்பாடலில் அவர் அமைத்திருந்த ஹார்மொனி. முக்கியமாக இடையிசைகளில். அப்படியொரு ஹார்மொனியை இந்தியத் திரையிசையில் அதற்கு முன் கேட்டதில்லை. அதை ஃப்யூஷன் என்று சொல்வது அப்பாடலில் வெளிப்பட்டிருந்த மேதைமைக்கு நான் செய்யும் துரோகம். உங்களுக்கே தெரியும் மேற்கத்திய இசையின் சாஸ்திரிய சங்கீதத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வரம் வாசிக்கப்படுவதில்லை. ஆனால் மேற்கத்திய இசையில் அந்த கான்செப்ட் உண்டு. இப்போது அந்த தத்துவத்தை இந்திய இசையில் பொருத்தும்போது, இந்திய மரபிசையின் ராகத்தில் அதில் ஒலிக்கும் ஸ்வரங்களுக்கு ஹார்மொனியான (அதோடு சேர்ந்து கேட்டால் அபஸ்வரமாக ஒல்லிக்காமல், ஒத்திசைவாக இருக்கும் ஸ்வரம்) ஸ்வரத்தை – அதன் கார்ட் வடிவத்தோடு சேர்ந்து இசைத்தால் ஒரு பிரமாதமான இசையனுபவம் கிடைக்கும். இதையே நான் இளையராஜாவின் இசையிலிருந்துதான் புரிந்துகொண்டேன். அப்படி ஹார்மோனியாக ஒரு விஷயத்தைச் செய்யவேண்டுமென்றால் – இந்திய மரபிசை, மேற்கத்திய இசை இரண்டிலும் பிரமாதமான நிபுணத்துவம் இருக்கவேண்டும். அந்த நிபுணத்துவம் வெளியே துருத்திக்கொண்டு தெரியாத அளவுக்கு அழகியல் ரசனை இருக்கவேண்டும்.
பெரும்பாலும் இந்திய இசையில் ஃப்யூஷன் என்று சொல்லப்படுபவை, இந்த இடத்துக்குள் வரவே முடிவதில்லை. மேற்கத்திய ஸ்கேல்களையும், இந்திய ராகங்களையும் அடுத்தடுத்து வாசிக்கும் ஒரு நுட்பமே பெரும்பாலான ஃப்யூஷன்களில் இருக்கின்றன. நான் பெரிதும் மதிக்கும் எல்.சுப்ரமணியம், பண்டிட் ரவிஷங்கர், எல்.ஷங்கர் – ஜான் மெக்லாலின் போன்றோர் செய்யும் ஃப்யூஷன் இந்த வகையே. இந்த தத்துவம் ஒரு பக்கமென்றால் இதே ஹார்மொனி கான்செப்ட்டின் இன்னும் கடினமான வடிவமான கெளண்ட்டர்பாய்ண்ட் இன்னும் இந்திய இசையில் இளையராஜாவைத்தவிர வேறு யாராலும் சிறப்பாக வெளிக்கொணரவே முடியவில்லை. என் கண்மணி உன் காதலன், பருவமே புதிய பாடல் பாடு, சிட்டுக்குருவி முத்தம் தருது – ஒன்றா இரண்டா. உங்களுக்குத் தெரிந்தே இருக்கும் – கெளண்ட்டர் பாய்ண்ட் என்பது ஒரே சமயத்தில் வெவ்வேறு ட்யூன்களை வாசிப்பது. யோசித்துப் பாருங்கள். கேட்பதற்கு ஒரே இரைச்சலாக cacaphony-ஆக இருக்காது? ஆனால் சமகாலத்தில் வாசிக்கப்படும் ஸ்வரங்கள் (வெவ்வெறு ட்யூன்களில் இருப்பவை), ஹார்மொனியாக இருக்கும்போது கிடைக்கும் அனுபவம் out of the world என்று பழங்காடியாகத்தான் சொல்லமுடியும். இளையராஜா இந்த கெளண்ட்டர்பாய்ண்ட் விஷயத்தை மிக மிக சர்வசாதாரணமாகச் செய்கிறார். பல பாடல்களில் நாம் கேட்கும் ஒரு விநாடியில் பின்னணியில் நான்கு வெவ்வேறு ட்யூன்கள் – கிடார், ப்யானோ, வயலின், குரல் – என வந்துபோகும். அக்னிநட்சத்திரத்தின் பாடல்களில் அவற்றைக் கேட்கலாம். கிட்டத்தட்ட எல்லா பாடல்களிலும் அது உண்டு என்றாலும், அக்னிநட்சத்திரம் பிரபலமான ஒன்று என்பதால் அதைக் குறிப்பிட்டுச் சொல்கிறேன். இந்த ஹார்மொனி, கெளண்ட்டர்பாயிண்ட் போன்ற விஷயங்களெல்லாம் தெரியாத பலரும், இதிலென்ன புதுமை – இதைத்தான் எம்.பி.ஸ்ரீனிவாசன் செய்துவிட்டாரே, இதைத்தான் எல்.சுப்பிரமணியம் செய்துவிட்டாரே என்று கேட்கிறார்கள்.
என் குரு இளையராஜாவின் இசையை அறிமுகப்படுத்தியபின் நான் அவருடைய பல பாடல்களைத் தேடித்தேடிக் கேட்டு, என் குருவுக்கும் அவ்வப்போது போட்டுக்காண்பிப்பேன். ஒரு கட்டத்துக்கு மேல் என் குரு இளையராஜாவைப் பற்றி எதுவுமே சொல்லுவதில்லை. ஒரு வித ஆயாசம் கூட அவருக்கு வந்துவிட்டது. இந்த மனுஷனைப் பற்றி என்ன சொல்வது என்றுதான். என் குரு கொண்டாடும் பிருந்தாவன ஸாரங்கா, பூர்ய தனஸ்ரீ, கலாவதி – இளையராஜாவுடையது.
என் குருவைப் பார்க்க ஹரிபிரஸாத் செளராஸ்யா அடிக்கடி வருவார். என் குருவைப் பற்றி பொதுஜனங்களுக்குத்தான் தெரியாதே தவிர, ஹிந்துஸ்தானி ஜாம்பவான்களுக்குத் தெரியும். என் குருவின் ஒரு சிறு அங்கீகரிப்பான தலையசைப்புக்காக ஏங்கும் பல ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். செளராஸ்யா அப்படி அடிக்கடி வந்து அவரிடம் ஆசி வாங்கிச் செல்வார். ஒருமுறை அப்படி அவர் வந்திருந்தபோது பேச்சு இளையராஜாவைப் பற்றி வந்தது. ஹரிபிரஸாத் செளராஸ்யா இளையராஜாவைப் பற்றிச் சொன்னவற்றை யாரும் நம்பமாட்டார்கள். செளராஸ்யா ‘nothing but wind’ என்ற இளையராஜாவின் இசைத்தொகுப்பில் வாசித்திருக்கிறார். தனித்தனி நோட்ஸ்களைப் பார்த்த அவர் அவ்வளவு விருப்பமாக இல்லை. ஆனால் வாசிக்க வாசிக்க அவர் அதில் பொதிருந்த மேதைமையைக் கண்டுகொண்டாராம். அதன்பின்பு அடுத்தடுத்த நாட்களுக்கு வீட்டில் ப்ராக்டிஸ் செய்துகொண்டுதான் போனேன் என்றார் அவர். சாரு, ஹரிபிரஸாத் இப்படியெல்லாம் ப்ராக்டிஸ் செய்துதான் ஒருவிஷயத்தைக் கொண்டுவரவேண்டும் என்றிருக்கக் கூடிய ஆள் இல்லை. அவர் உட்கார்ந்த இடத்தில் இசை பொங்கிப் பிரவாகமாக வரும். அவர் என் குருவுக்காக வாசித்தாத ஹிந்தோளத்தை மூன்று மணி நேரம் கேட்டவன் நான். அப்படியொருவர் சாதகம் செய்துவிட்டு வாசிக்கப்போகிறார் என்றால்? அந்த இசைத்தொகுப்பு வெளியானதும் கேட்டுவிட்டு, தானே கிளம்பி நேரடியாக இளையராஜாவை சந்தித்துப் பாராட்டிவிட்டு வந்தேன் என்றார் அவர். பண்டிட் ரவிஷங்கர், பண்டிட் அஜோய் சக்ரபர்த்தி இவர்களும் இளையராஜா மீது மிகமிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவர்கள்.
நீங்கள் சொல்லியிருக்கும் செக்கொஸ்லாவேகிய இசைக்கலைஞரின் இசையை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். இன்றும் தொடர்பிலிருக்கும் என் கல்கத்தா மேற்கத்திய இசைகுருவின் விருப்பமான கம்போஸர் அவர். அவருக்கும் இளையராஜாவுக்கும் மேதைமை என்றொரு விஷயத்தில்தான் தொடர்பே தவிர, அவரை இவர் காப்பியடித்தார் என்று சொல்வதெல்லாம் சரியில்லை சாரு. இளையராஜா பந்துவராளிக்கும், மேஜர்கார்டுகளுக்கும் இருக்கும் இணைத்தன்மையை வைத்து அமைத்திருக்கும் நான் கடவுள் பின்னணி இசையின் அருகே கூட இவர் நெருங்கமுடியாது. பல இணையதளங்களில் உங்கள் படைப்புகள் லத்தீன் அமெரிகக்ப் படைப்புகளிலிருந்து உருவப்பட்டவை என்று எழுதுகிறார்கள். அதைப் படிக்கும்போதெல்லாம் என் மனம் எப்படிப் புண்படுமோ, அப்படித்தான் நீங்கள் இளையராஜாவைக் குறித்து உருவுகிறார் என்றபோதும் வலித்தது. அதையெல்லாம் இண்டர்நெட் பொடிசுகள் செய்யலாம் சாரு. நீங்களுமா? மன்னிக்கவும் குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவரிடம் இப்படியெல்லாம் பேசக்கூடாது. இந்திய மரபிசையின் ஆதாரமே குருபக்திதான். அதை நான் மீறுகிறேன் என்பது என்னை வேறுவிதத்தில் காயப்படுத்துகிறது. இருந்தாலும் எழுதத்தொடங்கிவிட்டேன்.
உண்மையில் இந்தியாவிலிருந்து உருவான மாபெரும் இசைமேதைகளில் ஒருவர் இளையராஜா சாரு. இதை வேறு யார் சொன்னாலும் நீங்கள் நம்பாமல் போகலாம். ஏழு வருடங்கள் மேற்கத்திய செவ்வியல் கற்றவன், 18 வருடங்கள் ஹிந்துஸ்தானி கற்றுக்கொள்பவன், எத்தனையோ ஹிந்துஸ்தானி இசைமேதைகளோடு நேரடிப் பரிச்சயம் உள்ளவன், இவ்வளவுக்கும் மேலாக உங்கள் எழுத்தை சுவாசிப்பவன் நான் சொல்வதையாவது கேளுங்கள் சாரு. யாராவது இனிமேல் இளையராஜா இதைக் காப்பியடித்திருக்கிறார் பார் என்று உங்களிடம் சொன்னால், பதிலுக்கு அவர்களை அதில் ஒன்றன் மீது ஒன்றாக வரும் பல லேயர்களைத் தனித்தனியாக அடையாளப்படுத்தி எந்த லேயர் காப்பியடிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லச்சொல்லுங்கள். திறந்து வைக்கப்பட்ட கற்பூரம் போல் ஆவியாகிவிடுவார்கள்.
இசையைக் குறித்து உங்களிடம் நேரிலும் உரையாட எனக்கு ஆசை. ஆனால் அதற்கு முன் நான் உங்களை நெருங்குமளவுக்காவது தைரியப்படுத்திக்கொள்கிறேன். இந்த டிசம்பர்-ஜனவரியில் தமிழகம் வருவேன். புத்தகக்கண்காட்சியில் உங்களை சந்திக்கிறேன்.
நமஸ்காரங்களுடன்,
ராபர்ட் சின்னதுரை
டியர் ராபர்ட்,
என் வாழ்நாளில் எனக்கு வந்த கடிதங்களிலேயே அற்புதமான ஒரு கடிதம் இதுதான்.   எனக்கு இளையராஜா மீது வெறுப்பு இல்லை; கோபம் மட்டுமே.  இசைக் கடவுள் என்று நான் மதிக்கும் பாப் மார்லியை குப்பை என்று சொல்லி விட்டாரே என்ற கோபம்.  தான் பிறந்து வளர்ந்த மண்ணையும் மக்களையும் இடது கையால் விரட்டி அடிக்கிறாரே என்ற கோபம்.  மக்கள் பாடகனான கத்தரை குப்பை என்கிறாரே என்ற கோபம்.  உலக சினிமாவைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் மிஷ்கினின் நந்தலாலாவுக்கு டப்பாங்குத்து இசை அமைத்திருக்கிறாரே என்ற கோபம்.  அவ்வளவுதான்.  ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  என் சேமிப்பில் இளையராஜாவின் பாடல்கள் தான் அதிகம்.
சமீபத்தில் கூட அவருடைய வீட்டிற்கு நான் சென்றிருந்தேன்.  நவராத்திரி கொலுவுக்கு.  அவர் வீட்டில் சாப்பிட்டேன்.  உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பார்களே; இனிமேல் இளையராஜா பற்றி என்னால் விமர்சிக்கவே முடியாது போலிருக்கிறதே என்று எண்ணி வாழ்க்கையில் ஒருமுறையாவது பாராட்டி விடுவோம் என்று அவருடைய நவராத்திரி இசைக் கச்சேரிகளைப் பற்றிப் பாராட்டி ஒரு பத்திரிகைக்கு எழுதி அனுப்பினேன்.  என் வாழ்வில் நான் எழுதிய ஒரு கட்டுரை முதல்முதலாகத் திரும்பி வந்தது.  அந்தப் பத்திரிகையின் மீதும் கேஸ் போட்டிருக்கிறார் என்று.  என் மனநிலை எப்படி இருக்கும் சொல்லுங்கள்.  சரி, இது இசைக்கு அப்பாற்பட்ட விஷயம் என்று தர்க்கரீதியாக யோசிக்கும் போது புரிகிறது.  ஆனால் நாம் எப்போதும் தர்க்கத்தில் வாழ்வதில்லையே? அந்தக் கடுப்பில் தான் நான் எப்போதோ எழுதிய ஒரு கட்டுரையை இங்கே பதிவேற்றம் செய்தேன்.
மேலும், இளையராஜாவின் மிக நெருங்கிய உறவினர் – அவரது குடும்ப உறுப்பினர் – எனக்கும் நெருங்கிய நண்பர்.  அவர் அழைப்பில்தான் இளையராஜாவின் வீட்டுக்குச் சென்றேன்.
இது உங்கள் கடிதத்துக்கு பதில் அல்ல…  நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  எனவே இது ஒரு மிக அவசரமான பதில்…  விவாதிக்க மாட்டேன்.  உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவே செய்வேன்.  என் இலக்கிய ஆசானுக்கு… என்ற உங்கள் கடிதத்தின் தலைப்பைக் கண்டந்தும் என் மலையாள வாசகர்களின் ஞாபகமே வந்தது.  அவர்களிடம்தான் இலக்கியத்தைக் கொண்டாடும் இத்தகைய மாண்பைக் கண்டிருக்கிறேன்.  இங்கே தமிழ்நாட்டில் அவர்கள் என்னை இலக்கிய ஆசானாகவே நினைத்தாலும் அவர்களின் கடவுளான இளையராஜாவை விமர்சித்து விட்டதால் ‘டேய் முட்டாள்…’ என்றே ஆரம்பிப்பார்கள்.  நீங்கள் அப்படி இல்லை.  உங்களிடமிருந்து இசை பற்றி நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.  என்னுடைய கலகம் காதல் இசை என்ற நூலை வாசித்திருக்கிறீர்களா? அதை ஜெயமோகனின் நண்பர் ஒருவர் குப்பை என்று திட்டி எழுதியிருந்தார்.  அவரும் பெரிய இசை ரசிகர்தான் என்று சொல்லியிருந்தார்.  ஆச்சரியமாக இருந்தது.
சாரு
31.10.2010.
4.07 p.m

சனி, 18 செப்டம்பர், 2010

இசைஞானி இளையராஜாவுக்கு தேசிய விருது!!!:))

சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது இசைஞானி இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது.  சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைக் கலைஞர்களுக்கான 57வது தேசிய விருதுகள் சென்றவாரம் அறிவிக்கப்பட்டன. தேர்வுக் குழு தலைவர் ரமேஷ் சிப்பி இதனை அறிவித்தார்.

சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது இசைஞானி இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது. மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியாகி பெரும் வெற்றி கண்ட பழஸிராஜா படத்துக்காக இந்த விருது இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது.

தேசிய அளவில் சிறந்த இசையமைப்பாளர் விருதினை இளையராஜா பெறுவது இது நான்காவது முறையாகும். ஏற்கெனவே சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ர வீணை ஆகிய படங்களுக்காக இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

இது குறித்த இசைஞானியின் பேட்டி :-

தேசிய திரைப்பட விருதைப் பெறுவது ஊக்குவிப்புதானே தவிர, அங்கீகாரம் அல்ல," என்றார் இசையமைப்பாளர் இளையராஜா.மலையாள திரைப்படத்தின் பின்னணி இசைக்காக, 2009-ம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றுள்ள இளையராஜா சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், "பின்னணி இசைக்காக தேசிய விருது பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முன்பு மூன்று முறை தேசிய விருதுகள் வாங்கியிருந்தாலும், இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். 

ந்த விருது ஊக்குவிப்புதானே தவிர, அங்கீகாரம் இல்லை. 'பழசிராஜா' படத்துக்கு இவ்விருது கிடைத்ததில் இன்னும் மகிழ்கிறேன்.ஏனெனில், 'பழசிராஜா' ஒரு மதம் சார்ந்த படம். இஸ்லாமியத்தைத் தழுவிய கதைக்கு எனக்கு விருது கிடைத்திருக்கிறது என்பதால், இசைக்கு மதம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. 

ழசிராஜாவில் நான் செய்தது கடின வேலை என்று கூற முடியாது. நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தேன். இந்த நேரத்தில், அந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தற்காலத்தைப் பொறுத்தவரை, மேற்கத்திய இசைக் கருவிகள்தான் இசை உலகை ஆளுகிறன்றன. 
 நான் இந்த இசைத் துறைக்கு யாரை நம்பியும் வரவில்லை. இது, பெரிய இசை மகான்கள் வாழ்ந்த மண். எல்லோரும் போய் சேர்ந்து விட்டார்கள். அவர்கள் முன்பு நிற்பதற்கே பயமாக இருக்கும். பெரிய ஜாம்பவான்கள் முன் நாம் என்ன செய்து விட போகிறோம் என நினைக்கத் தோன்றும். அவர்கள் எல்லாருமே உன்னதமான இசையைத்தான் தந்து சென்றார்கள். 

னால், இப்போது இசையின் நிலை அப்படி இல்லை. இசைக்கு மொட்டை அடித்து புருவத்தையும் எடுத்து விட்டார்கள். இசை மொட்டையாக இருக்கிறது. இன்று இருந்த நிலை, இசைக்கு அன்று இருந்திருந்தால், நான் இந்தத் துறைக்கே வந்திருக்க மாட்டேன். 

ன் மனம் எப்போதுமே விருதுகளை எதிர்பார்த்து வேலை செய்யாது. இசையமைப்பது மட்டுமே என் வேலை. ரசிகர்களுக்கு எப்போதும் இசையைத்தான் என்னால் அளிக்க முடியும்," என்றார் இளையராஜா.
=====0000=====
நன்றி:-விகடன்

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

மீண்டும் இசைஞானியின் கிராமிய விருந்து!!! அழகர்சாமியின் குதிரை

வுதம் மேனன் தயாரிக்கும் புதிய படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. இசைஞானியும் கவுதம் மேனனும் இணைவது இதுவே முதல் முறை.

பல முறை தன்னை இளையராஜாவின் ரசிகன் என்று கூறி வந்தார் கவுதம் மேனன். ஆனால் அவர் இதுவரை ஒரு படத்திலும் அவருடன் இணைந்து பணியாற்றியதில்லை. இந்த நிலையில் கவுதம் மேனனின் சொந்தப் பட நிறுவனமான ஃபோட்டான் ஃபேக்டரி 'அழகர்சாமியின் குதிரை' என்ற படத்தைத் தயாரிக்கிறது. வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல படங்களை இயக்கிய சுசீந்திரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்படும் படம் இது. படத்தின் ஒரு முக்கிய பாத்திரமாகவே இசை பயணிப்பதால், இதற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என கவுதம் மேனன் கேட்டுக் கொள்ள, இசைஞானியும் சம்மதித்துள்ளார். இதன்மூலம் இளையராஜா-கவுதம் மேனன்-சுசீந்திரன் என புதுக்கூட்டணி உருவாகியுள்ளது.

பாஸ்கர்சக்தி எழுதிய நாவலைத்தான் அழகர்சாமியின் குதிரை என படமாக எடுக்கிறார்கள். வெண்ணிலா கபடிக் குழுவில் நாயகியாக நடித்த சரண்யா மோகன்தான் இதிலும் நாயகி. அந்தப் படத்தில் கபடி விளையாட்டி வீரராக நடித்த இளைஞரை முதல் முறையாக ஹீரோவாக்கியுள்ளார் சுசீந்திரன்.

நிகில் முருகன் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றுகிறார்.
நல்ல செய்திக்கு நன்றி:-தட்ஸ்தமிழ்

சனி, 5 ஜூன், 2010

யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் பாடல் திருவள்ளுவர்! - இளையராஜா=தட்ஸ் தமிழ் செய்தி

சென்னை: படிக்கும்போதே புரிந்து கொள்ளும் அளவு எளிய செய்யுள் அமைப்பு திருக்குறள். அதற்கு தனியான விளக்கமெல்லாம் தேவையில்லை என்று கூறியுள்ளார் இசைஞானி இளையராஜா.

கவிஞர், திரைப்படாலாசிரியர் பூவை செங்குட்டுவன் எழுதி இசை அமைத்துள்ள 'குறள் தரும் பொருள்' ஆடியோ சிடியை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார் இளையராஜா. சென்னை ஆழ்வார்ப்பேட்டை நாரத கான சபாவில் இந்த விழா நடந்தது.

இளையராஜா பேசுகையில், "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறளை, அனைத்து மக்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இசை வடிவில் கொண்டு வத்தமைக்காக கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

1969-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். சங்கிலி முருகன் நாடகத்துக்கு இசையமைப்பாளராக இருந்தபோது 'நான் உங்கள் வீட்டு பிள்ளை...' என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த பாடலை எழுதிய கவிஞர் செங்குட்டுவனை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

நான் முதன் முதலில் சினிமாவில் கவிஞர் செங்குட்டுவனின், 'ஊரும் பழனியப்பா, பெயரும் பழனியப்பா, ஆறுதலை வேண்டுகிறேன் ஆறுமுக சாமியப்பா' என்ற பாடலுக்கு தான் இசையமைத்தேன். அவர் எனது மூத்த சகோதரர் போன்றவர்.

திருக்குறள் உண்மையிலேயே மிக எளிய கட்டமைப்பு கொண்டது. படித்ததும் புரிந்து கொள்ளும் செய்யுள் வடிவம் அது" என்றார்.

கவிஞர் பூவை செங்குட்டுவன் பேசுகையில், "திருக்குறளுக்கு 400-க்கும் மேற்பட்டவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலான உரைகளைப் படித்து, ஆனால் மு.வ. வின் விளக்கத்தை அடிப்படையாக வைத்து 8 மாதம் பாடல்களை எழுதினேன். இரண்டரை ஆண்டுகளாக முயன்று இசை வடிவாக மாற்றியுள்ளேன். சினிமாவில் குறைவான பாடல்களாக இருந்தாலும் நிறைவான பாடல்களை வழங்கிய மனநிறைவு உள்ளது.." என்றார்.

நடிகர் விவேக் பேசுகையில், "திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்தும் உருகார்' என்பர். அந்தத் திருவாசகத்தை இசை வடிவில் மக்களிடம் சேர்த்தவர் இளையராஜா அந்த வகையில் குறள் தரும் பொருளும் வெற்றி பெறும். 133 அதிகாரத்தில் உலகை அடக்கியவர் திருவள்ளுவர் ஆகையால் தான் சமயம், இனம், மொழி அனைத்தையும் கடந்து உலகப் பொதுமறையாக உள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் பல மணி நேரம் வீடியோ கேம், கம்ப்யூட்டர், லேப்டாப் என்று மாறிவிட்டதால், ஒரு குறளையாவது டைப் செய்தால் தான் அவை இயங்கும் என்ற நிலை வந்தால் எளிதில் திருக்குறள் அவர்களை சென்றடையும்' என்றார்.

எஸ்.ராமகிருஷ்ணனை பாட்டெழுத வைத்த இசைஞானி!=தட்ஸ்தமிழ் செய்தி

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் பாடலாசிரியராகிறார்... படித்துறை என்ற படத்தின் மூலம்.

முழுக்க முழுக்க திருநெல்வேலி தாமிரபரணிக் கரையில் எடுக்கப்படும் படம் படித்துறை. பாலுமகேந்திராவின் சீடரான சுகா இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும், இசைஞானி இளையராஜா இசை தர ஒப்புக் கொண்டாராம்.

படத்தில் பாடலாசிரியர்களாக இரண்டு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிறார் ராஜா. அவர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் எஸ் ராமகிருஷ்ணன். இருவருமே ஆரம்பத்தில் பாடல் எழுத சற்றுத் தயங்க, இளையராஜாதான் அவர்களை உற்சாகப்படுத்தி பாட்டெழுத வைத்துள்ளார்.

"என் படத்துக்கு இளையராஜாதான் இசை என்பதில் இன்று நேற்றல்ல... பாலு மகேந்திராவிடம் பணியாற்றிய காலத்திலேயே தீர்மானமாக இருந்தேன். நானும் இசையைப் படித்தவன். ராஜாவின் இசைக்கு என்னைக் கொடுத்தவன். படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களுமே முத்திரை பதிக்கும்..." என்கிறார் இயக்குநர் சுகா.

இந்தப் படத்தைத் தயாரிப்பவர் நடிகர் ஆர்யா. ஆனால் படத்தில் ஒரு காட்சியில் கூட அவர் இல்லையாம்!

பாரதிராஜா தலைமையில் இன்று 'நத்திங் பட் விண்ட்'-தட்ஸ் தமிழ் செய்தி

இயக்குநர் பாரதிராஜாவின் தலைமையில், இளையராஜா பங்கேற்கும் நத்திங் பட் விண்ட் இசைவிழா இன்று சனிக்கிழமை மாலை நடக்கிறது.

சென்னை சங்கீத நாடக சபையில் (மியூசிக் அகாடமி) மாலை 7 மணிக்குத் துவங்கும் இந்த விழாவுக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமை வகிக்கிறார். கவிஞர் வாலி உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுப் பேசுகிறார்கள்.

இசைஞானி இளையராஜாவின் 67 வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரைக் கவுரவிக்க, அவரது மகள் பவதாரிணி நடத்தும் இசை நிகழ்ச்சி இது. மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரையுலகின் பிரபலமான பின்னணி பாடகர்கள் பாடுகிறார்கள்.

இரவு 9 மணி வரை நடக்கும் இந்த இசை நிகழ்ச்சிக்கு நத்திங் பட் விண்ட் எனப் பெயர் வைத்துள்ளனர். இந்தப் பெயரில் 25 ஆண்டுகளுக்கு முன் இளையராஜா உருவாக்கிய இசை ஆல்பம் விற்பனையில் பெரும் சாதனைப் படைத்தது. பண்டிட் ஹரிபிரசாத் சௌராஸியா இதில் இளையராஜாவுடன் இணைந்து பணிபுரிந்தார். சர்வதேச அளவில் மிகப் பிரபலமான இசை ஆல்பங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த ஆல்பத்தில் இடம் பெற்ற சில இசைக் கோர்வைகளையும் விழாவில் தரப் போகிறார்களாம்.
=====000=====

புதன், 12 மே, 2010

ஹவ் டு நேம் இட் – 24 ஆண்டுகளுக்கு முந்தைய மாபெரும் இசைமுயற்சி


ilayarjfun-05
இளையராஜாவின் வாத்திய இசைத் தொகுப்பான ‘எப்படிப் பெயரிட’(How to Name It) இசை ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இணைய குழுக்களும், இசை ரசிகர்களும் இதை இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என இன்றளவும் மதித்து வருகிறார்கள். கல்லூரி விழாக்களிலும், தனிப்பட்ட தொகுப்புகளிலும் பின்னணி இசையாக இத்தொகுப்பின் இசையை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். சோக கீதம், துள்ளலான இசை எனச் சிறு பகுதிகளாக இத்தொகுப்பின் சரடுகள் இசை ரசிகர்களின் ஞாபகத்தில் இன்றும் நிறைந்துள்ளன. என் நண்பர்களில் பலர் இப்பாடல்களில் பகுதிகளை மனப்பாடமாகப் பாடுவதை கேட்டிருக்கிறேன். பல நிகழ்வுகளின் ‘மூட்’ உருவாக்கும் இசையாக ‘எப்படிப் பெயரிட’ தொகுப்பு இன்றும் தமிழகத்தில் ஏதாவதொரு மூலையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால், வெளியான கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளில் இத்தொகுப்பு பற்றி பதியப்பட்ட விமர்சனங்களை ஒரு கையளவில் அடக்கிவிடலாம். அங்கொன்று இங்கொன்றாகத் தகவல்கள் பதியப்பட்டிருக்க, புது ரசிகர்கள் தெளிவில்லாத விமர்சனங்களால் குழப்பமடையக்கூடிய நிலை உள்ளது. இப்போது, நாம் ஒற்றை வரியில் மதிப்பீடுகளை அள்ளித் தெளிக்கும் காலத்தில் இருந்தாலும், கடந்த 24 ஆண்டுகளாய் பெரும்பான்மையான விமர்சனங்கள் ட்விட்டர் பாணியிலேயே பதியப்பட்டிருக்கின்றன. எழுதப்பட்ட கட்டுரைகளும் தெளிவில்லாத சித்திரத்தை மட்டுமே நம்முன் வைக்கிறன. பல சங்கம (Fusion) இசைத் தொகுப்புகள், குறிப்பாகத் தமிழ் மையம் வெளியிட்ட Mozart meets India போன்ற தொகுப்புகளுக்கு அடிப்படையாக அமைந்த இத்தொகுப்புக்கு நடுநிலையான விமர்சனங்கள் உருவாகாத நிலை இன்றும் இருப்பது வேதனையானது. வெளியான காலகட்டத்திலிருந்து இன்றுவரை இருக்கும் சில முக்கியமான விமர்சனங்களையும், அவை முன்வைத்த கேள்விகளையும் மறுபரிசீலனை செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.
எல்லா நாட்டிலும் கலைஞர்கள் இயங்கும் துறைக்கு வெளியே அவர்களின் ஆளுமைகளை விமர்சிப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. கலைக்கு வெளியே நடக்கும் விவாதங்களுக்கு அதிகமாகத் தீனி போடுவதும் இவைதான். இப்படிப்பட்ட விமர்சனங்களை மீறியே ஒரு கலைஞன் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். இளையராஜா மீது வைக்கப்படும் விமர்சனங்களும், அதன் வழியே எழும் விவாதங்களும் பெரும்பாலும் இந்த அளவிலேயே நின்றுவிடுகின்றன. பெரும்பான்மையான விமர்சனங்கள், இளையராஜாவின் ஆளுமையை மட்டும் கருத்தில் கொண்டுள்ளன. இளையராஜாவின் இசைப் புரட்சி பற்றிய விமர்சனங்கள் எங்கும் பதியப்படுவதில்லை. அவர் நிகழ்த்திய இசைச் சாதனைகளை ஒதுக்கிச் செல்லும் நிலை பரிதாபமானது. இணையத்தில், தனிப்பட்ட குழுக்கள் மட்டுமே இளையராஜாவின் இசை குறித்த விவாதங்களைச் செய்து கொண்டிருக்கின்றன. பல சமயங்களில் அவை எங்கும் பதியப்படாமல் காற்றில் கரைந்துவிடுகின்றன.
கிராமிய இசைப் பாணி, கர்நாடக சாஹித்தியங்கள், மேற்கத்திய செவ்வியல் முறைகள் மூன்றையும் சரியான கலவையில் இணைத்து இனிமையான பாடல்களாகக் கொடுத்தது இளையராஜா செய்த அபாரமான சாதனை. இசையின் சட்டகத்தினுள் இருந்த எண்ணிலடங்கா சாத்தியங்களை இவர் பாடல்கள் திறந்து காட்டின. பலர் இளையராஜாவின் திரையிசை மூலம், கர்நாடக சங்கீத நுணுக்கங்களை எதிர்ப்பாதையில் சென்றடைந்தது வேறெங்குமே நடக்காத மாற்று நிகழ்வுகளாகும்.  பல ராகங்களை திரைப்பாடல்களில் கையாண்ட இவரின் பாண்டித்தியத்தைப் பற்றித் தனிப் புத்தகமே எழுதலாம். மேலும், ஒரு குறிப்பிட்ட இசைப் பாணியை மட்டுமே திரையிசையில் நிகழ்த்த முடியும் என்ற கருத்தை மாற்றி, பின்ன்ணி இசையைத் தமிழ்ப் படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரமாகவே ஆக்கிய சாத்னையும் இவரது.
howtonameitதிரையிசை வட்டத்தைத் தாண்டி 1986 ஆம் ஆண்டு மே மாதத்தில், ‘ எப்படிப் பெயரிட ‘( How to Name it) என்ற இசைத் தொகுப்பை இளையராஜா வெளியிட்டார் (இதில் பிரதான வயலின் கலைஞர் வி.எஸ்.நரசிம்மன். கடந்த வருடம் இவர் ராகசாகா என்ற சங்கம இசைத் தொகுப்பை வெளியிட்டார்). இன்று, திரைப்பட இசை வெளியிடுவது ஒரு பிரம்மாண்டச் சடங்காக மாறியுள்ளது. யூ ட்யூப் முதல் பல வலைத்தளங்களில் ஒளித்தொகுப்புகளாகவே இவை நமக்குக் கிடைக்கின்றன. 1986 ஆம் ஆண்டு ‘எப்படிப் பெயரிட’ இதே போல் ஒரு பொது அரங்கில் வெளியானது. ஆனால், இன்று அந்த வெளியீட்டு விழா பற்றி துணுக்குச் செய்திகள் மட்டுமே நம்மிடம் இருக்கின்றன; ஒரு புரட்சிகரமான தொகுப்பாக இந்திய அளவில் அது கவனிக்கப்படவில்லை. ஒரு அகழ்வாராய்ச்சி போல் தேடினால் மட்டுமே சிதிலங்களாய் ஒரு சில விவரங்கள் கிடைக்கின்றன. அவை முழுமையான பார்வையை கொடுப்பதில்லை.
அசோகமித்திரனின் ‘காலக்கண்ணாடி’ கட்டுரைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கட்டுரை ஓரளவு இந்நிகழ்வை நமக்காகப் பாதுகாத்திருக்கிறது. அழைப்பு விடுத்திருந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் யாருமே அந்த வெளியீட்டுக்கு வரவில்லை என மேடையில் வருத்தத்துடன் இளையராஜா தெரிவித்ததாக இந்தக் கட்டுரையில் உள்ளது. (முழுக் கட்டுரையை கடைசியில் இணைத்திருக்கிறேன்.) இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களும் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாக கொண்டவை என்றாலும், கர்நாடக இசைக் கலைஞர்கள் இதைக் கண்டுகொள்ளவேயில்லை என்பதையும் இளையராஜா பின்னர் கூறியுள்ளார்.
மேற்கிசை உலகில் நடந்த ஒரு நிகழ்வுடன் இதை ஒப்பிட்டுப்பார்க்கலாம் – May 29, 1913 ஆம் ஆண்டு ‘The Rite of Spring’ எனும் நடன-இசை பாரீஸில் கூச்சல், அடிதடிக்கிடையே அரங்கேற்றம் ஆனது. இன்றும்,அது உருவாக்கிய அதிர்வலைகளை ஆச்சர்யத்துடன் இசைக் கலைஞர்கள் நினைவு கூறுகிறார்கள். இந்த இசை இருபதாம் நூற்றாண்டை வரவேற்ற நவீன மேற்கிசைப் பாணியாக எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி பற்றி பலவிதமான ‘கதை’களும் உருவானது. பார்வையாளர்கள் மத்தியில் ஹிட்லரும் இருந்தார் என்பது அதில் புகழ் பெற்றக் கதை. இப்படியாக, ஒரு நிகழ்வைத் தொகுப்பதோடு மட்டுமல்லாமல் (வெளியான தேதி, நேரம் உட்பட), விழாவில் கலந்துகொண்டவர்கள், இசை நுட்பங்கள், அதன் கதைகள், கட்டுக்கதைகள் எனத் தொகுக்கும் வழக்கம் மேற்கிசை உலகில் உள்ளது.
The Rite of Spring இசையில் உள்ளது போன்ற ஆழமான இசை நுட்பங்கள் இளையராஜாவின் எப்படிப் பெயரிட’ இசைத்தொகுப்பிலும் உண்டு. அதேபோல், இத்தொகுப்பில் கறாரான கர்நாடக மரபுகளுக்கு உட்பட்டவை தவிர மரபை மீறிய இசையும் உள்ளது. `
சுஜாதா, 1990ஆம் ஆண்டு மார்ச் மாத கணையாழியின் கடைசி பக்கத்தில் – `இளையராஜாவின் How to Name it ,It is Only Wind (Nothing But Wind தொகுப்பை இப்படிக் குறிப்பிடுகிறார்) போன்ற வினோதப் பெயர்களுடன் ஸிம்பொனியையும் சிம்மேந்திரமத்திமத்தையும் ஒட்ட வைக்க பெரும்பாடு பட்டாலும் கேட்கும்போது திட்டு திட்டாகத்தான் இருக்கிறது. சங்கராபரணம் ஒரு மேஜர் ஸ்கேல் என்றும் கீரவராளியோ ஏதோ மைனர் ஸ்கேலுக்கு சமானும் என்றும் ப்ரொபஸர் ராமநாதன் சொல்லியிருக்கிறார். இருந்தும் இரண்டையும் இணைக்கும் முயற்சிகள் வெள்ளைக்காரிக்கு தலைபின்னி பூ வைத்தாற் போகத்தான் அசம்பாவிதமான இருக்கின்றன. காரணம் , இரண்டும் அமைப்பில் அஸ்திவாரத்தில் வேறுபட்டவை. மேஜர், மைனர் என்பது ராகங்கள் அல்ல. அவை ஸ்வரங்களுக்கு இடையே ஆன ஒருவித பிணைப்பு, அல்லது உறவுமுறை` என இசையமைப்பாளர்களுக்கு பாடம் எடுக்கும் விதமான விமர்சனத்தை முன்வைத்தார். இப்படிபட்ட தன் வயப்பட்ட கருத்துகள் இத்தொகுப்பின் அடிப்படை நோக்கத்தை வெளிப்படுத்தத் தவறியது.
இத்தொகுப்பை ரசிக்க சங்கம (Fusion) இசையின் இலக்கணத்தை புரிந்து கொள்வது அவசியம். சங்கம இசைக்கென்று இலக்கணம் எதுவும் இல்லையென்றாலும் அதில் வாத்தியங்களும், ஒலியமைப்பும் கையாளப்படுவதைப் பொறுத்து இரண்டு அமைப்புகளைக் கொண்ட இலக்கணத்தை உருவகிக்கலாம்.
இரண்டு வகையான சங்கம இசைப் பாணிகள் உள்ளன. முதல் பாணியில் – ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத பல ஒலித் துண்டுகள், ஒரே நேரத்தில் இணக்கமாக, இனிமையாக ஒலிக்கும். இது பண்யிணைப் புள்ளி (Counterpoint) பாணியாகும். இது பிரபலமான பலத் தொகுப்புகளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. பல ஒலிகள் ஒரே நேரத்தில் ஒலிப்பதால் இது செங்குத்தான (Vertical) இசை வடிவம் என்றாகிறது.
அடுத்த பாணியில் – வரிசையாக அடுத்தடுத்து ஒலிக்கும் வெவ்வேறு இசை வடிவங்கள். ஒரு ஒலித் துண்டு குறிப்பிட்ட நேரம் ஒலிக்கும். இதைத் தொடர்ந்து மற்றொரு ஒலி ஒலிக்கும். இப்படி அடுத்தடுத்து தொடர்சியாக வருவதால், இது கிடைநிலை (Horizontal) வடிவம் என்றாகிறது.
இந்த இரு இசைப் பாணியையும் பயன்படுத்தி, மேற்கத்திய இசையில் பல வடிவங்கள் உள்ளன. சொனாட்டா (Sonata), கான்சர்ட்டோ (Concerto), சிம்பொனி (Symphony), காண்டாடா(Cantata), ஃபூக் (Fugue) போன்ற வடிவங்களில் இவ்விரு வகைகளும் உள்ளன. ஒவ்வொன்றும் பல பிரிவுகள் கொண்டவை. இசைக்கருவிகளின் ஒலியை முறையாக அடுக்கி,இனிமையான இசையை கொடுப்பது இவற்றின் பொது அம்சமாகும்.
இளையராஜாவின் இசையின் வேர் ஜான் செபாஸ்டியன் பாக்கின் (Johann Sebastian Bach) இசை பாணியிலிருந்து உருவானது. இவர் திரைப்படங்களிலும் பாக்கின் பாணியையே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். ஃபூக் அமைப்பில் மேற்கிசையில் முத்திரை பதித்தவர் பாக். முப்பத்துக்கும் மேலான உள்ளமைப்புகளை உடைய ஃபூக், அடிப்படையில் மூன்று பகுதிகளைக் கொண்டது. சில ஃபூக் அமைப்புகள் மூன்றுக்கு மேற்பட்ட பகுதிகளையும் கொண்டிருக்கும். முதல் பகுதியும், கடைசி பகுதியும் ஒரே வகையான ஒலிகளைக் கொண்டிருக்கும்(அவை வேகத்தில் மாறுபடலாம்) . நடுப்பகுதியில் மட்டும் சில மாற்றங்களுடன் ஒலித்து, முதல் பகுதி இசையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். இசைக்கருவிகளின் ஒலியை முறையாக அடுக்கி, அவை ஒலிக்கவேண்டிய வரிசையில் ஒன்றாகக் கோர்ப்பது இசை ஒருங்கிணைப்பாளரின் (Conductor) மிகப்பெரிய சவாலாகும்.
இந்த வடிவத்தை இளையராஜா பல்லாயிரக்கணக்கான திரையிசைப் பாடல்களிலும், பின்ணனி இசையிலும், ஃபூக்கின் பல சாத்தியங்களாக நுழைத்துள்ளார். பண்யினைப் புள்ளி உத்தியை கச்சிதமாக பயன்படுத்தும் இசை பாணியாக ஃபூக் இருப்பதால், பல இசைக் கருவிகளின் சங்கமமும் இங்கு சாத்தியமாகிறது.
திரைப்படத்தின் பின்ணனியில் இருவித வயலின் இசை ஒன்றாகச் சேர்வதும் நடுவே ஒரு இனிமையான குழலோசை ஒலிப்பதும் பண்யினைப் புள்ளியில் சேர்வதால் இனிமையான இசையாகிறது. இவை மட்டும் போதாது. சரியான தொனியில், தேவையான கால அளவில் ஒலித்தால் மட்டுமே இது இனிமையான இசையாகும். இல்லையென்றால் வெவ்வேறு இசையாக தனித்தனியாக ஒலித்து, இனிமையற்றதாக மாறிவிடும்.
‘How to name it’ இசைத்தொகுப்பு வெளியானபின் பல காட்டமான, நிராகரிப்பு தொக்கிய விமர்சனங்கள் முன்வைக்கப்படன. ராஜலகஷ்மி என்பவர் மீட்சி இதழில் எழுதிய ‘இளையராஜாவின் இசைக்குழப்பங்கள்’ எனும் கட்டுரை இப்படிப்பட்ட கட்டுரைகளின் ஒரு சான்று. இளையராஜாவின் இசைப் பிரயோகங்களை அளவுகோலாகக் கொள்ளாமல், அரசியல் சார்புகளை மட்டும் கணக்கில் கொண்டு எழுதப்பட்ட பல கட்டுரைகளில் இதுவும் சேர்ந்துகொண்டது.
உதாரணத்துக்கு, இந்தக் கட்டுரையில் I met Bach in my house மற்றும் ..and we had a talk பாடல்களில் எந்த புதுமையும் இல்லை, ஏதோ ஒரு இந்திப் பாடலை நினைவூட்டுகிறது என்ற ஒற்றை வரியில் இப்பாடல்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது. ஆனால், உண்மையில் பாக் வழியை பின்பற்றி அமைந்த முத்திரை பாடல்களாக ‘I met Bach in my house’ மற்றும் ‘..and we had a talk’அமைந்திருக்கிறது. இவை இளையராஜாவின் இசையில் வெளிபட்ட பாக்கின் தாக்கத்தை திட்டவட்டமாக நிலைநிறுத்துகிறது. சங்கம இசையின் கருத்தை தெளிவாக உணர்த்தும் இப்பாடல்கள், இவ்விரு இசை மேதைகளின் ராக அலங்காரங்களை அருகருகே நம் கண் முன் நிறுத்துகிறது.நம்மை சந்திக்க வரும் விருந்தாளிகளுக்கு நம் முறைப்படி வரவேற்பு கொடுப்பது வழக்கம். நம் விருந்தாளிக்கு புரியும் மொழியில் பேசினால் மட்டுமே கருத்து பரிவர்த்தனை நடக்கும். இதை மனதில் கொண்டு, இளையராஜா கர்நாடக ராக பாணியில் பாக்கின் புகழ் பெற்ற வயலின் இசை வடிவமான Goldberg variations மற்றும் Bourre in E minor இரண்டையும் நிகழ்த்திக்காட்டுகிறார். `நம் இசை வடிவங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை கேளுங்கள்` – என பாக்கை நோக்கி இளையராஜா சொல்வது போல் இந்தப் பாடல் இருக்கிறது.
தொடர்ந்து இக்கட்டுரை இதே போன்ற தட்டையான பார்வையை முன்வைக்கிறது. இதன் உச்சகட்டமாக, Is it Fixed, The Study of Violin, You Cannot be free என்ற பாடல்களில் எந்த புதுமையும் இல்லை , இளையராஜா இசையமைத்த திரைப்பட பாடல்களை நினைவூட்டுகிறது என்று சில வார்த்தைகளில் இப்பாடல்களில் நுட்பம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மையா? இப்பாடல்கள் என்ன உணர்வுகளை வெளிப்படுத்துகிறது?
இப்பாடல்கள் மூலம் இளையராஜா உருவாக்க விரும்பும் உணர்வுகள் மிக நுட்பமானவை. இம்மூன்று பாடல்களும் உருவாக்கும் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று மிகவும் நெருக்கமானவை. இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனாலும்,இந்த மூன்று பாடல்களும் மரபான இந்திய மற்றும் மேற்கிசை வடிவங்களிலிருந்து விலகி உள்ளன. குறிப்பாக, நேர அளவுகள்(தாளங்கள்) மிகச் சுதந்திரமாக கையாளப்பட்டிருக்கின்றன. இச்சுதந்திரம், ஜாஸ் பாணியில் வழுக்கிச் செல்லும் ஒலிகளை உருவாக்குகிறது. கர்நாடக சங்கீதத்தின் கறாரான இலக்கணத்தை மீறும் முயற்சிகளைச் செய்திருப்பது , புரட்சிகர இசையாக இன்றும் இதை நிலைநிறுத்துகிறது. பாடல்களின் பெயர்கள் இசையமைப்பாளரின் எண்ணத்தையும், மரபு மீறிய முயற்சியயும் பிரதிபலிக்கவே செய்கிறது.ஒரு குறிப்பிட்ட மேற்கிசை வடிவத்தில் இந்த மூன்றும் பொருந்துவதில்லை. சோதனைப் பகுதிகளாக ஒலிக்கும் இவை சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவை. ஆனாலும், இவை அடிப்படையில் கர்நாடக ராகங்களை மையமாகக்கொண்டு அமைந்த பாடல்கள். அம்மரபுகளை மீறுவதில் உள்ள முனைப்பு பாடலின் அமைப்பிலும் அதன் பெயரிலும் தெரிகிறது.
மேலும், கோட்பாட்டு ரீதியில் இவை இசையின் இரு நிலைகளை உணர்த்துகிறதாகத் தோன்றுகிறது. கர்நாடக சங்கீதத்திலுள்ள கறாரான இலக்கணங்களுக்கிடையே நிலவும் சுதந்திரம் இம்மூன்று பாடல்களிலும் வெளிப்படுகிறது. கர்நாடக சங்கீதத்தின் கட்டமைப்பில், மேற்கிசை வடிவங்கள் இணைவதன் மூலம் இச்சுதந்திரத்தின் சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.
இப்படிப்பட்ட கட்டுரைகளில் வெளிப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டு – இதைப் போன்ற இசையை அவர் திரைப்படப்பாடல்களிலும், பிண்ணனி இசையிலும் ஏற்கனவே நிகழ்த்திக்காட்டியுள்ளார். அதனால் பல பாடல்களையும் சிறு துண்டுகளாக இணைக்கும் உணர்வே ஏற்படுகிறது – என்பதாகும். இந்திய இசை வரலாற்றில் இதற்கான பதில் உள்ளது.
கர்நாடக இசை தோன்றிய காலத்திலிருந்து , இந்த டிசம்பர் சீசன் வரை பாடப்படும் பாடல்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவை. அடிப்படையில் இந்தப் பாடல்களை பாடகர்கள் வெவ்வேறு விதமாகப் பாடுவர். இதை Rendition – நிகழ்த்துதல், பாடும் பாணி என சுதந்திரமாக தமிழாக்கலாம். திரையிசையில் இளையராஜா உபயோகித்த ராக வெளிப்பாடுகள் இத்தகைய தனி பாணியாகும். ஒரே பாடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட ராகங்களை உபயோகித்து இனிமையான பல பாடல்களை உருவாக்கியுள்ளார். பலதரப்பட்ட வாத்தியக்கருவிகளை உபயோகித்து, உறுத்தாத பல இசைத் துண்டுகளை திரைக்கதைக்கேற்ப பிண்ணனியில் இசைத்துள்ளார். குறிப்பாக, கிராமிய இசை, இந்திய மற்றும் மேற்கத்திய இசை நுணுக்கங்களை சரியான கலவையில் தன் முதல் படத்திலிருந்து உருவாக்கி வருகிறார். இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் இம்முயற்சிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் பணியைச் செய்கின்றன.
இத்தொகுப்பின் மையக்கருத்தை அடிப்படையாக்கொண்டு மூன்று பாடல்கள் உள்ளன. இவை இத்தொகுப்பின் மாஸ்டர்பீஸ் என்று உறுதியாகச் சொல்ல முடியும். மூன்று பகுதிகளைக் கொண்ட `எப்படிப் பெயரிட` பாடல் ஃபூக் அமைப்பைக் கொண்டது. தெளிவான சிம்மமேந்திர மத்யமம் ராகத்தில் தொடங்கி, சண்முகப்பிரியாவில் கலக்கும் முதல் பகுதி, நடுப் பகுதியில் உள்ள வீணை, வயலின் அமைப்புக்கு அழைத்து செல்கிறது. இரண்டாவது வயலின் ஸ்வரங்களுக்கிடையே குதித்து மேற்கிசை பாணியில் ராகங்களுடன் இணைகிறது.
இத்தொகுப்பிளுள்ள இசையை கேள்வி-பதில் பாணியில் புரிந்துகொள்ளலாம்.சில ஒலிகள் கேள்விகளாய் முன் வைக்கும் இடத்திலிருந்து வரும் புதிய ஒலி பதிலாக மாறுகிறது. இது இசையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இந்தப் பாடலில் முதன்மை வயலினும், இரண்டாவது வயலினும் கேள்வி கேட்பது போல் உயரச் சென்று ஸ்வரங்களை நிறுத்துகிறது. இந்நிலையில் ஸ்வரங்கள் உருவாக்கு இசை முடிச்சுக்களை உணரலாம். பின்னர் பதில் சொல்லும் வகையில் அடுத்த பகுதி இம்முடிச்சை விலக்குகிறது.
அடுத்தப் பாடலான `Mad Mad Fugue’ சுத்தமான ஃபூக் அமைப்பாகும். இத்தொகுப்பிலுள்ள மற்ற பாடல்களை விட இப்பாடல் தெளிவான கட்டமைப்பைக் கொண்டது. திட்டவட்டமான செவ்வியல் தன்மையான ஃபூக் அமைப்பில், நிகழ்கால வாத்தியக்கருவியான டிரம்ஸ் இணைகிறது. இப்படிப்பட்ட இசைக்கோர்வையின் நிர்வகிப்பு ஒருங்கிணைப்பாளரின் திறமையை வெளிக்கொண்டு வருகிறது. ஸ்வர வரிசையின் (ஸ்வரமாலையின் (Chromatic) ) தேர்வு பிரம்மாண்டமான வடிவமைப்பாக உருவாகிறது. குறிப்பாக, கடைசி ஒரு நிமிடத்தில், வயலினும் டிரம்ஸும் செய்யும் சாகசங்கள், திரைப்பட உச்சகட்ட காட்சி போல வேகமாகச் செல்கிறது. மிகக் கட்டுக்கோப்பான ஃபூக் வடிவத்தில் மின்னல் வேகத்தில் நுழையும் இந்தப் பகுதி, பாடலின் பெயரை மீண்டும் நினைவூட்டுகிறது.
Chamber Welcomes Thyagaraja பாடல் ஒவ்வொரு இசைக்கருவியும் கல்யாணி ராகத்தை விரிவாக கையாள்கிறது. இரண்டாவது பகுதியில் இணையும் மேற்கிசை ஒலிகள், ஒற்றை வயலினுடன் சேர்ந்து கம்பீரமான இசை வடிவமாக மாறுகிறது. தியாகப்பிரம்மம் இப்படியொரு குழு இசை நடக்கும் அரங்கில் நுழைந்தால், அவரை வரவேற்க ஒலிக்கப்படும் வரவேற்பு இசை போல் கம்பீரமாய் முடிகிறது.
இத்தொகுப்பு இளையராஜாவின் இசையில் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமைகளுக்காக படைக்கப்பட்ட விருந்தாகும். தன் இசையின் வேர் இவர்களிடம் தொடங்குவதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார். மேலும், சம்பிரதாயமான இசை வடிவங்களிலிருந்து முற்றிலும் விலக இளையராஜா எடுத்த முக்கியமான முயற்சி. இதில் பல தொழில்நுட்ப புதுமைகளையும் அவர் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். குறிப்பாக ஷெனாய், பசூன் (Bassoon) போன்ற புதுவித குழற்கருவிகளை உபயோகித்துள்ளார். எந்த புது பாணியும் காற்றிலிருந்து தோன்றுவதில்லை.
கலைஞனுக்குள் எழும் கேள்விகளே கலையாய் வெளிப்படுகின்றது. இளையராஜா எடுத்துக்கொண்டிருக்கும் கரு, முதல் திரைப்படத்திலிருந்து அவருடன் இருந்தவை – குறிப்பாக சங்கம இசை முன்வைக்கும் சவால். இரு இசை வடிவங்களின் சங்கமத்தை, முதல் திரைப்படத்திலிருந்து கையாண்டு வந்தாலும், இத்தொகுப்பு பல எல்லைகளைத் தொட்டிருக்கிறது. இதில் முன்வைத்திருக்கும் சவால் இன்றும் இளையராஜாவைத் தொடர்கிறது என்றே நமக்குத் தோன்றுகிறது.
குறிப்பாக, You cannot be free, Is it fixed போன்ற பாடல்கள் உருவாக்கிய புதிய இசை பாதைகள், பாக்கின் Goldberg variations போல் இன்றளவும் யாரும் தாண்டிச்செல்ல இயலாத முயற்சியாய் இருப்பதே இத்தொகுப்பின் வெற்றி.
20091463252054288135அசோகமித்திரன் கட்டுரையிலிருந்து…
“இந்த ஊரில் உள்ள சங்கீத வித்வான்கள் அனைவருக்கும்தான் நான் அழைப்பு அனுப்பியிருந்தேன்” என்று இளையராஜா கூறினார். ஆனால், அவருடைய புதிய படைப்பான `எப்படிப் பெயரிட` இசைத்தட்டு வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவர்கள் அநேகமாக எல்லாருமே சினிமாத் துறையினர்தான். டி.வி.கோபால கிருஷ்ணன் ஒரு விதிவிலக்கு. ஆனால், கோபால கிருஷ்ணனையே பாதி சினிமாக்காரர் என்று நினைப்பவர்களுண்டு.
சங்கீதத் துறையினர் வரவில்லை என்றாலும் விஞ்ஞானி ராஜா ராமண்ணா நிகழ்ச்சிக்குத் தலைமைத் தாங்கி, இளையரஜாவின் மேற்கு-கிழக்கு இசை இணைப்பு முயற்சிகள் ரசமானவை; பல ஆண்டுகள் முன்பு அவரே எண்ணியிருந்த முயற்சிகள் என்றார். பழுத்த அனுபவம் மிகுந்த பியானோ நிபுணரான ஹாண்டல், இளையராஜாவிடம் அழைத்துச் சென்ற மேல்நாட்டு இசைக் கலைஞர்கள் அனைவரும் இளையராஜாவின் கிரகிப்பு ஆற்றலையும், திரைப்படக் காட்சிக்கு ஏற்றபடி நொடிப்பொழுதில் இசை அமைத்து அதை வாத்திய கோஷ்டிக்குத் தெரிவித்து ஒலிப்பதிவு செய்யும் திறமையையும் கண்டு வியந்திருக்கிறார்கள் என்றார். `எப்படிப் பெயரிட` இசை மாஸ்கோவில் நடக்கவிருக்கும் இந்திய விழாவுக்கு எடுத்துச் செல்லப் படவேண்டும் என்றார். நாற்பதாண்டுகளாக இந்தியத் திரைப்படத் துறையில் பெருமதிப்புக்குரியவராக இருந்து வரும் நெளஷாத் அவர்கள் இளையராஜாவிடம் கற்க நிறைய இருக்கிறது என்றார். இவை எல்லாம் சாதாரணமாகக் கிடைக்ககூடிய பாராட்டுகள் அல்ல.
வெறும் டியூன்கள் என்று பிரித்துப் பார்த்தோமானால் `எப்படிப் பெயரிட` இளையராஜாவின் பல முக்கிய திரைப்படங்களின் சிறப்பான இடங்களை நினைவுபடுத்தும். ஆனால் இந்தப் படைப்பின் சிறப்பம்சம் வாத்திய கோஷ்டி நிர்வகிப்பு; திரு.வி.எஸ். நரசிம்மனின் பிரதான வயலின்; சுவரூபத்தைக் கலைக்காதபடி இந்திய ராகங்களுக்கு மேலைய இசை வடிவம் தருதல். இத்திசையில் முயற்சிகள் இதுவரை செய்யப்படவே இல்லை என்று கூற முடியாது. ஐந்தாறு மாதங்கள் முன்பு ஒரு போர்ச்க்கீசிய இசைக்குழுவுடன் சென்னை வந்த வயலின் நிபுணர் எல்.சுப்பிரமணியன் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இத்தகைய முயற்சிகளை அரங்கேற்றியிருக்கிறார்.
`சங்கீதக் கனவுகள்` என்ற நூலின் ஒவ்வொரு எழுத்தும் இளையராஜாவால் எழுதப்படாமல் இருக்கலாம். இளையராஜா எழுத்தாளரல்ல. ஆனால் நூலில் கூறப்பட்டிருக்கும் அனுபவங்கள், சிந்தனைகள், உணர்வுகள் அவருடையதே என்பதைச் சந்தேகிக்க இடமில்லை. உண்மையில் இம்மாதிரி நூல்களில் இவைதான் முக்கியம். ஐரோப்பாவில் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த இசை மேதைகளின் இல்லங்கள் ஷேத்திரங்களாகப் பராமரிக்கப்பட்டு வரும் விசுவாசத்தைக் கண்டு மனமுருகி, `நமது நாட்டில் தியாகப்பிரும்மம் வாழ்ந்த வீட்டை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் சொல்வதற்கே வெட்கமாயிருக்கிறது…20091463252054288135என்னைக் கேட்டால் தியாகையருக்குக் கோயிலையே கட்டிவிடுவேன்…நான் கேட்டால் `நீ சினிமாக்காரன்` என்பார்கள்.` என்று ஓரிடத்தில் இளையராஜா எழுதியிருக்கிறார். இப்படி அந்த நூலில் பல பொறிகள். இவ்வளவு உலக நடப்புப் பரிச்சயம் கொண்ட இளையராஜாவுக்கு அவருடைய விழாவுக்கு சங்கீதப் பிரமுகர்கள் வராதது வியப்பைத் தந்திருக்காது.
நன்றி – ரா.கிரிதரன் (சொல்வனம் – இணைய மாத இதழில் வெளியானது) பலரை சென்றடைய வேண்டும் என்னும் நோக்கில் இந்த மறு பதிப்பு

இசைஞானியின் இசையில் திருவாசகம் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்.

இளையராஜாவின் திருவாசகம் கேட்டபோது.

இரண்டு மாதங்களுக்கு முன் ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம் பாடலை கேட்கத் துவங்கி அன்றிரவு முழுவதும் இளையராஜாவின் பாடல்களாக கேட்டுக் கொண்டிருந்தேன். அது போதாமல் மறுநாள் நண்பர்கள் வசமிருந்த இளையராஜாவின் பாடல்கள் தொகுப்பில் இருந்து 250 பாடல்கள் கொண்ட இரண்டு குறுந்தகடினை வாங்கி வந்து கேட்கத் துவங்கினேன். நாலைந்துநாட்கள் இளையராஜா மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன்.


ஜானகி, சித்ரா, ஜென்சி, பாலசுப்ரமணியம்,ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், இளையராஜா என்று மாறும் குரல்களும் இசையமைப்பின் வியப்பும் மேலிட இளையராஜாவின் அலுத்துபோகாத மேதமை இன்றும் அதீத உற்சாகம் தருவதாக இருந்தது.

இவ்வளவு திரையிசை பாடல்களை தொடர்ச்சியாக நான் கேட்டதேயில்லை. எப்படியும் நானூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் கேட்டிருப்பேன்.


இதில் பகல் எல்லாம் பாட்டு கேட்பது, படுக்கையில் கிடந்தபடியே இரவெல்லாம் கேட்பது. விழித்து எழுந்தவுடன் சில மணி நேரம் கேட்பது என்று விருப்பமான மனிதரின் கையை பிடித்துக் கொண்டு சுற்றியலைவது போலகேட்டுக் கொண்டேயிருந்தேன். புத்தகங்கள் திரைப்படங்கள் எதிலும் நாட்டம் திரும்பவேயில்லை.

சிறுவயதில் பல பாடல்களை இசைதட்டில் கேட்கும் போது ஏற்படும் நெருக்கம் திரையில் பார்க்கும் போது ஏற்படாது. அதற்கு மாறாக சில பாடல்களைக் கேட்கும் போது நடிகர் நடிகைகளை மறந்து கேட்க முடிவதேயில்லை. எல்லா ஊர்களிலும் அந்த காலத்தில் ஒரு டி.எம்.எஸ், ஒரு சுசிலா இருந்தார்கள். அவர்கள் சினிமா பாடல்களை அப்படியே அச்சு பிசகாமல் அதே குரலில் பாடி கைதட்டு வாங்குவார்கள்.

என் பள்ளியில் கூட ஒரு சுசிலா படித்தாள். அவளை தமிழ்தாய் வாழ்த்து பாடுவதற்காகவே வைத்திருந்தார்கள். பள்ளிவிழா நாட்களில் அவள் சினிமாபாடல்களை பாடுவாள். அந்த பாடல்களை அத்தனையும் சிறப்பானவை. எப்படி அதை தேர்வு செய்து அந்த பாடல்வரிகளை நினைவில் வைத்திருந்து பாடுகிறாள் என்று வியப்பாக இருக்கும்

அது எம்எஸ்விஸ்வநாதன் காலம். ஒருமுறை எம்.எஸ்வி கச்சேரிக்காக விருதுநகர் வந்திருந்தார். கொட்டும் மழையில் நனைந்து கொண்டே எங்கே நிம்மதி கேட்டோம். அந்த நாட்களில் திரையிசை பாடல்கள் மட்டுமே வெகுமக்களின் பிரதான ரசனையாக இருந்தது. எல்லா வீட்டில் அந்த பாடல்கள் முணுமுணுக்கபட்டன. விசேச நாட்களில் காலை துவங்கி இரவு வரை ரிக்கார்ட் போட்டார்கள்.

அந்த நினைவில் பாடல் என்றாலே உரத்தசப்தத்தில் கேட்க வேண்டும் என்று உள்ளுற பதிந்து போயிருக்கிறது. அதிலிருந்து விடுபடுவதற்கு பல வருசங்கள் ஆகிப்போனது. என் கல்லூரி நாட்களில் நண்பர்கள் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள். அவருக்காகவே படம் பார்த்தார்கள். அப்போது தான் டூ இன் ஒன் அறிமுகமானது. ஆகவே பாடல்களை ரிக்காடிங் சென்டரில் போய் பதிந்து கொண்டு வந்து கேட்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது.

உதிரிப்பூக்கள் முள்ளும் மலரும் கிழக்கே போகும் ரயில் புதிய வார்ப்புகள் என்று இளையராஜாவை பற்றி பேசாத நாட்களே இல்லை. அது வளர்ந்து எண்பதுகளின் உச்சத்தை அடைந்த போது நாளைக்கு ஒரு படம் பார்க்கும் ஆளாகியிருந்தேன். ஏதாவது ஒரு படத்தை இரவுக்காட்சி பார்ப்பது என்பது பல வருடமாக எனது வழக்கம். அப்படி படம்பார்த்துவிட்டு திரும்பும் பின்னிரவில் ஆள் அரவம் அற்றுப்போன தெருவில் சைக்கிளை நிறுத்தி சாய்ந்து கொண்டு இளையராஜாவை பற்றி பேசிக் கொண்டிருப்போம்.

எல்லா ஊரிலும் பின்னிரவிற்கு என்றே ஒரு டீக்கடை திறந்திருக்கும். அங்கே நிச்சயம் இளையராஜாவின் பாடல் ஒன்றை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ப்ரியா பாடல் வந்த புதிதில் அதை ஒரு நாளைக்கு ஐம்பது தடவை கேட்ட நண்பர்கள் என்னோடு இருந்தார்கள். அது ஒரு மயக்கம். சினிமாவை மீறிய பாடல்களை கேட்கவும் பின்னால் அலையவும் செய்த நாட்கள் அது.

இளையராஜாவின் திருவாசகம் வெளியான நாட்களில் நானும் இயக்குனர் ஜீவாவும் ஒரு நாளிரவு காரில் மகாபலிபுரத்திற்கு சென்றிருந்தோம் வழி முழுவதும் , காரில் திருவாசகம் ஒலித்தபடியே வந்தது. முதன்முறையாக கேட்டபோது அதை மனது ஏற்றுக் கொள்ள மறுத்தது. முக்கிய காரணம் அந்த பாடல்களை ஒதுவார்கள் பாடி கேட்டிருக்கிறேன். அது மனதில் அழியாமல் ஒலித்தபடியே இருந்தது.

ஆனால் அன்றைய இரவில் கடற்கரை அருகில் நல்ல இருளில் மணல்வெளியில் அமர்ந்தபடியே திருவாசகம் கேட்ட போது புற்றில் வாழ் அரவம் வேண்டேன் என்ற வரிகளும் இசையும் மனதை பாரம் போல அழுத்த துவங்கி முன்னறியாத துயரும் விம்மலும் உருவாகியது.

கடலின் மீது தொலைவில் தெரியும் ஆகாசத்தில் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. வீதிகளை , வீடுகளை துயில் கொள்ள செய்திருந்தது இருள் . யாவையும் விழுங்கியபடியே திருவாசகம் மெல்ல ஒரு அலை காலடியில் உள்ள மணலை இழுத்து போவது போல மனதை கொஞ்சம் கொஞ்சமாக தன்வசமாக்கி கொண்டிருந்தது. பரவசமும் தத்தளிப்பும் கூடிய அப்படியான மனநிலை சில தருணங்களிலே தான் ஏற்படுகிறது.

எங்கோ அந்த இருளினுள் புன்னகையுடன் இளையராஜா அமர்ந்திருப்பது போன்ற நெருக்கம் உண்டானது

பால்யவயதிலிருந்து கேட்டிருந்த தேவாரம் திருவாசகம் மனதில் ஏற்படுத்தியிருந்த அத்தனை திரைகளையும் விலக்கி இன்னொரு தளத்தில் திருவாசகம் ஒலிக்கிறது. அது ஆன்மீக அனுபவமல்ல. மாறாக தன்னிருப்பின் சாரத்தை வெளிப்படுத்தும் அற்புதமான தருணம். இசை உயர்கிறது. குரல் ஆழந்த வேதனையை வெளிப்படுத்துகிறது. மனது நிலை கொள்ள மறுத்து நழுவுகிறது. காற்றில் படபடக்கும் ஈரத்துணியின் சில்லிடலைப் போல ஏதோவொரு சில்லிடலை தருகிறது இசை .

இதே போன்ற ஒரு அனுபவத்தை திருச்சுழி கோவிலில் ஒரு முறை அனுபவித்திருக்கிறேன். பிரகாரத்தில் நடந்து வரும் போது எங்கிருந்தோ நாதஸ்வரத்தின் மயக்கும் இசை மிதந்து வந்தது. கல்படியில் அமர்ந்திருந்தேன். யானையின் காது அசைவது போல, தன்னியல்பாக விரிந்து அசைந்து கொண்டிருந்தது இசை. பிரகாரத்தில் யாருமில்லை. நூற்றாண்டுகளாக உறைந்துகிடந்த கற்சிற்பங்களில் கூட நெகிழ்வு கூடி கண்கள் சொருகியிருப்பது போன்று தோன்றியது. நாதஸ்வர இசையென்பது தாழம் பூவின் அடர்மணம் போன்றது. தனியானதொரு சுகந்தம்.

யார் வாசிக்கிறார்கள் என்று எழுந்து போய் பார்க்க தோன்றவில்லை. ஆனால் இசை நின்ற போது கண்ணுக்கு தெரியாத குளிர்ச்சி அந்த மண்டபம் எங்கும் படர்ந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது.

யாரோ முகம் தெரியாத ஒரு இசைக்கலைஞன் தன் நூற்றாண்டு கால துயரத்தை நாதஸ்வரத்தின் வழியே வழிய விட்டிருக்கிறான்.

அரக்கினை போல பிசுபிசுப்பாக உடலில் ஒட்டுகிறது இசை. என்ன அனுபவமது. உடலின் நரம்புகள் நடுங்க துவங்கியிருந்தன, கைரோமங்கள் குத்தியிட்டு நின்றன.

சிவனின் மீது விழுந்த பிரம்படி ஊரில் இருந்த யாவர் முதுகிலும் விழுந்தது என்ற புராண கதையைப் போன்று கோவிலின் பூஜைக்கு வாசிக்கபட்ட இசை, பிரகாரம் தாண்டி, சிற்பங்கள், தாண்டி கல் மண்டபம் தாண்டி தெப்பம் கடந்து திறந்த காதுள்ள யாவருக்குள்ளும் நிரம்பி வலியும் சந்தோஷமும் ஒருங்கே தருவதாகயிருந்தது.

கிட்டதட்ட அதற்கு நிகரான ஒரு அனுபவத்தை திருவாசகம் கேட்கும் போது உணர்ந்தேன். அதன்பிறகு ஒரு வார காலத்திற்கு வேறு எதையும் கேட்கவில்லை. கேட்க தேவையிருப்பதாகவும் மனம்உணரவில்லை. நல்லிசையின் சுபாவம் அது தானில்லையா.

***
நன்றி எழுத்தாளர்.திரு.எஸ்ரா அவர்கள்

செவ்வாய், 9 மார்ச், 2010

இசைஞானியின் சமீபத்திய ப்ரெஸ்மீட் புகைப்படங்கள்

7 Jan 2010 அகி மியூஸிக் நிறுவந்த்தாருடன் நடந்த ப்ரெஸ்மீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.மிக்க நன்றி :-www.chennai365.com

Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99